Wednesday, February 16, 2022

பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.02.22

திருக்குறள் :

அதிகாரம்: நட்பு

குறள் :790

இனையர் இவரெமக்கு இன்னம்யாம் என்று
புனையினும் புல்லென்னும் நட்பு.

விளக்கம்:

இவர் எமக்கு இத்தனை அன்பு உடையவர்; நாமும் இவர்க்கு இப்படியே என்று ஒருவரை ஒருவர் அலங்காரமாகப் பாராட்டிச் சொன்னாலும் நட்பு அற்பமானதாகப் போய்விடும்.

பழமொழி :

Don't measure the worth of the person by their size.
கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும் எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

 2. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர் எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி :

பண்பு இல்லாதவனின் வாழ்க்கை இருண்ட கோயில் போன்றது. நற்பண்புகளே வாழ்விற்கு ஒளியூட்டுகிறது.----கலாம் ஐயா

பொது அறிவு :

1. நமது அடிப்படை உரிமைகளை யார் திருத்தம் செய்ய முடியும்? 

பாரளுமன்றம். 

2. ஈரோடு மாவட்டம் எந்த ஆற்றின் கரையில் உள்ளது? 

காவேரி.

English words & meanings :

Stir - to move liquid using a spoon. கரண்டியால் சமைக்கும் உணவை கலக்குதல். 

Simmer - cooking in a slow flame, மென் சூட்டில் சமைத்தல்

ஆரோக்ய வாழ்வு :

வெந்தயத்தை இரவில் ஊறவைத்து காலையில் சுடு தண்ணீரில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால், உடலிலுள்ள நச்சுப்பொருளை வெளியேற்றுவதோடு உடல் எடையையும் குறைக்கும். உடலில் உள்ள கொழுப்புகளை கரைப்பதோடு, ஜீரண சக்தியும் கூடும்.




நீதிக்கதை


ஆமை - நத்தை - முயல்

ஒரு காட்டில் ஆமையும், நத்தையும் நண்பர்களாய் இருந்தன. அவை இரண்டுக்கும் நீண்டகாலமாக, ஒரு மனக்குறை இருந்தது. தங்களால் வேகமாக நடக்கவோ, தாவிக் குதித்து ஓடவோ முடியவில்லை என்ற மனக்குறைதான் அது. ஒருநாள், அவை இரண்டும் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஓர் அழகிய வெள்ளை நிற முயல் தாவிக் குதித்து, ஓடி வருதைக் கண்டன.

முயலே நில்! என்றது ஆமை. முயல் நின்றது. நீ எப்படி இவ்வளவு வேகமாய் தாவிக் குதித்து ஓடுகிறாய்? என்று கேட்டது நத்தை. இது என்ன கேள்வி! உங்களுக்கு இருப்பதுபோல், என் முதுகில் கனமான ஓடு இல்லை. அந்தச் சுமை இல்லாததால், வேகமாக ஓடுகிறேன்! என்று சொல்லி விட்டு, முயல் அந்த இரண்டையும் கேலியாகப் பார்த்தது.

ஓஹோ! எங்களின் வேகக் குறைவுக்கு எங்கள் ஓடுதான் காரணமா? ஆமாம்! நீங்கள் உங்கள் ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட்டால், என்னைப் போல் வேகமாக ஓடலாம். வேகமாக ஓடுவதில், ஓர் அலாதியான சுகம் இருக்கிறது தெரியுமா! அனுபவித்துப் பாருங்கள்! என்றது முயல்

ஆமைக்கும், நத்தைக்கும் அந்த இடத்திலேயே தங்கள் முதுகு ஓடுகளைக் கழற்றிப் போட்டுவிட வேண்டும் என்ற ஆவல் பிறந்தது. அவற்றைக் கழற்ற முயன்றபோது, திடீரென புதர் மறைவில் ஏதோ அசையும் ஓசை கேட்டது.

ஆமையும், நத்தையும் ஆபத்தை உணர்ந்து, தங்கள் ஓடுகளைக் கழற்றும் முயற்சியைக் கைவிட்டன. சட்டென, புதர் மறைவிலிருந்து ஓரு ஓநாய் வெளிப்பட்டு, முயலை நோக்கிப் பாய்ந்தது. ஆமையும், நத்தையும், விருட்டென்று தங்கள் உடலை ஓடுகளுக்குள் இழுத்துக் கொண்டு, உயிர் பிழைத்தன. ஓநாய் முயலைப் பிடித்தது. சிறிது நேரம் சென்ற பிறகு ஓடுகளை விட்டு வெளியே வந்த ஆமையும், நத்தையும் முயலின் ரத்தத்தைப் பார்த்து, உறைந்து போயின.

தாங்கள் வேகமாய் ஓடுவதைவிட, உயிர் பிழைத்து வாழ்வதே முக்கியமானது என்பதை உணர்ந்தன. தங்கள் எதிரியிடமிருந்து காப்பாற்றிய தங்கள் ஓடுகளுக்கு அவை நன்றி கூறின.

இன்றைய செய்திகள்

17.02.22

★சீமை கருவேலம் மரங்களை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட திட்டத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் பொதுத்தளத்தில் இதுகுறித்து வெளியிடப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

★தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) சார்பில் சென்னையில் நேற்று புத்தக கண்காட்சி தொடங்கியது.

★ஜல் ஜீவன் இயக்கம் வாயிலாக 9 கோடி கிராமப்புற வீடுகளுக்குக் குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக
மத்திய அரசு தெரிவித்துள்ளது.

★இருசக்கர வாகன பயணத்தில் 4 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்றும், குழந்தைகளை அழைத்துசெல்லும்போது மணிக்கு 40 கி.மீ. வேகத்துக்கு மேல் செல்லக்கூடாது என்றும் மத்திய அரசு அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

★ரஷ்யா-உக்ரைன் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், உக்ரைன் எல்லையில் இருந்து சில படைப்பிரிவுகள் தங்கள் முகாமுக்கு திரும்புவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதனால், போர் பதற்றம் தணியும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.


Today's Headlines

 *The plan and project to destroy all Seemai karuvela trees are in the final and soon it will be uploaded in the public forum informed Tamilnadu government in High Court.

*On behalf of South Indian Seller and Publisher of books, yesterday book exhibition started in Chennai.

*Through Jal Jeevan Moment 9 crore village houses were given drinking water pipe connection - a statistic given by central government.

* During the two wheeler journey helmet is compulsory for children upto 4 years and the rider should not cross the speed 40 kms. An announcement made by the centre.

* Amidst the heavy tension between Ukraine and Russia, some of the regiments are returning back to their camp says Russia. This may reduces the war  tension.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment