Tuesday, February 17, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.02.2026

மார்ட்டின் லூதர்






திருக்குறள்: 

குறள் 513: 

அன்பறிவு தேற்றம் அவாவின்மை இந்நான்கும் 
நன்குடையான் கட்டே தெளிவு 

விளக்க உரை: 

அன்பு, அறிவு, ஐயமில்லாமல் தெளியும் ஆற்றல், அவா இல்லாமை ஆகிய இந் நான்கு பண்புகளையும் நிலையாக உடையவனைத் தெளியலாம்.

பழமொழி :

Hard work writes your destiny.         

கடின உழைப்பே உங்கள் விதியை எழுதும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. மூத்தோர் சொல் வார்த்தையும் முழு நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பின் இனிக்கும்.

2. எனவே மூத்தோர் சொல் கேட்டு நடப்பேன்.

பொன்மொழி : 

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிட்ஜ்

பொது அறிவு : 

01.இந்திய மக்களவையின் முதல் பெண் சபாநாயகர் யார்?

மீரா குமார்-Meira Kumar

02.இந்திய நாணயத்தின் (ரூபாய்) சின்னத்தை (₹) வடிவமைத்தவர் யார்?

 டி. உதய குமார்-தமிழ்நாடு
 D. Udaya Kumar - Tamilnadu

English words :

Famished-starving

Slugishly-slowly

தமிழ் இலக்கணம்: 

 வாக்கிய பிழை பாகம் 2
மாறன் சிறந்த இசை வல்லுனராக ஆக விரும்பினான்
வல்லுனராக –இதிலே ஆக என்று இருப்பதால் தனியாக ஒரு ஆக தேவையில்லை
2. பத்தே பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
பத்தே, மட்டும் இரண்டுமே அழுத்தம் கொடுக்கும் சொல். எனவே 
அ. பத்து கடைகள் மட்டும் திறந்து இருந்தன.

ஆ. பத்தே பத்து  கடைகள்  திறந்து இருந்தன.

என்று எழுத வேண்டும் 
நாளை மற்றும் ஒரு குறிப்பு பார்ப்போம்

அறிவியல் களஞ்சியம் :

பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை உடைக்கும் சரியான செயல்முறை இன்னும் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. இருப்பினும், பூஞ்சைகள் பிளாஸ்டிக்கை எளிய மூலக்கூறுகளாக சிதைக்கின்றன, பின்னர் அவை உறிஞ்சி அல்லது வெளியேற்றும் என்று நம்பப்படுகிறது.

பிப்ரவரி 18

மார்ட்டின் லூதர்  அவர்களின் நினைவுநாள்

மார்ட்டின் லூதர் (Martin Luther, நவம்பர் 10, 1483–பெப்ரவரி 18, 1546) ஒரு கிறித்தவத் துறவியும் செருமனிய மதகுருவும், இறையியலாளரும், பல்கலைக்கழகப் பேராசிரியரும், புரட்டஸ்தாந்தத்தின் தந்தையும், திருச்சபைச் சீர்திருத்தவாதியும் ஆவார். இவரது கருத்துக்கள் புரட்டஸ்தாந்தச் சீர்திருத்தத்தில் செல்வாக்குச் செலுத்தி மேனாட்டு நாகரிகத்தின் போக்கையே மாற்றியது. 

மைக்கலாஞ்சலோ அவர்களின் நினைவுநாள்

மைக்கலாஞ்சலோ



மைக்கலாஞ்சலோ டி லொடோவிக்கோ புவோனரோட்டி சிமோனி (Michelangelo di Lodovico Buonarroti Simoni, மார்ச் 6, 1475 - பெப்ரவரி 18, 1564) ஒரு இத்தாலிய மறுமலர்ச்சிக் கால ஓவியரும், சிற்பியும், கவிஞரும்,கட்டிடக்கலைஞருமாவார். இவர் மைக்கலாஞ்சலோ எனப் பொதுவாக அறியப்படுகிறார். இவரது கலைசார்ந்த பல்துறைத் திறமையின் உயர்ந்த தரம் காரணமாகச் சமகாலத்தவரான லியொனார்டோ டா வின்சியுடன் சேர்த்து இவரும் மறுமலர்ச்சிக் காலத் தந்தையெனக் கணிக்கப்படுகின்றார்.

மைக்கலாஞ்சலோவின் நீண்ட கால வாழ்க்கையில், அவர் படைத்தவைகள் அனைத்தும் அவரது அதிசயிக்கத்தக்க திறமைக்குச் சான்றாக அமைகின்றன. கடிதத் தொடர்புகள், வரைபடங்கள், நினைவுக் குறிப்புகள் என இவர் எழுதிக் குவித்தவை ஏராளம். இவைகளையும் சேர்த்தால், 16 ஆம் நூற்றாண்டில் அதிகமாக ஆவணப்படுத்தப்பட்ட கலைஞர் இவரே எனலாம்.

நீதிக்கதை

 நன்மை தீமை இரண்டையும் ஏற்றுக்கொள்

ஒரு வயதான விவசாயி தன் வயலில் பாடுபட்டு உழைத்து அதில் வரும் சொற்பமான வருமானத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார். ஒரு நாள் அவர் வளர்த்து வந்த குதிரை காணாமல் போய்விட்டது. தகவலைக் கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் என்ன ஒரு துரதிர்ஷட நிலை? என்று பரிதாபமாக விசாரித்தனர். அவர்களின் ஆறுதலுக்கு விவசாயி மௌனமாக இருக்கலாம் என்று பதிலளித்தார்.

அடுத்த நாள் தொலைந்துப்போன அவருடைய குதிரை தன்னுடன் மூன்று குதிரைகளை அழைத்து வந்தது. இதை ஆச்சர்யமாக பார்த்த அக்கம் பக்கத்தினர், நீ ரொம்ப அதிர்ஷ்டசாலி, இப்பொழுது நான்கு குதிரை உனக்கு கிடைச்சிடுச்சு என்றனர். தனக்குக் கிடைத்த அதிர்ஷ்டத்தைப் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் மறுபடியும் இருக்கலாம் என்று கூறினார் விவசாயி. 

ஒரு வாரத்துக்குப் பிறகு, விவசாயியின் மகன் குதிரையை வேகமாக ஓட்டிச்சென்று தவறுதலாக கீழே விழுந்து காலை உடைத்துக்கொண்டான். இப்பொழுது அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள், விவசாயிடம், உனக்கு ஒரு நல்லது நடந்தால், அடுத்து ஒரு கெட்டது நடக்குதே. உன் பையன் எழுந்து நடக்க பத்து மாதத்திற்கும்மேல் ஆகும் போல இருக்கிறதே, ரொம்ப கஷ்டமான நிலைமை என்று கூறி ஆதங்கப்பட்டனர். அப்போழுதும் அந்த விவசாயி பெரிதாக வருந்தாமல் இருக்கலாம் என்று அதே பதிலைக் கூறினார்.

ஒரே வாரத்தில் அந்த நாட்டில் போர் வந்துவிட்டது. வீட்டில் இருக்கும் எல்லா இளைஞர்களும் கட்டாயம் போரில் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது. வீடு வீடாக ராணுவத்தினர் புகுந்து இளைஞர்களை அழைத்துச் சென்றனர். ஆனால், அந்த ஏழை விவசாயியின் மகனுக்குக் கால் உடைந்து இருந்ததால் அவனை மட்டும் அழைத்துச் செல்லவில்லை. இதைக் கண்டு ஊர் மக்கள் அந்த விவசாயியின் அதிர்ஷ்டத்தைக் கண்டு புகழ்ந்தனர். இப்போதும் அந்த விவசாயி இருக்கலாம் என்று கூறினார்.

அந்த விவசாயி ஒவ்வொருமுறையும் கூறும் பதிலைக் கேட்டுக் கொண்டிருந்த அவருடைய நண்பர், அந்த விவசாயியைப் பார்த்து, உனக்கு நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் இருக்கலாம் இருக்கலாம் என்றே சொல்கிறாயே ஏன்? என்று கேட்டார்.

அதற்கு அந்த விவசாயி நல்லது, கெட்டது இரண்டும் நாணயத்தின் இருபக்கங்கள். யாருக்கும் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சுகம், துக்கம் இவை இரண்டும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புடையவை என்பதை உணர்ந்தாலே போதுமானது என்றார்.

இன்றைய செய்திகள்

18.02.2026

⭐ 2030க்குள் 33% மின் பேருந்துகள்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.

⭐இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்மைத்துறைக்கு ரூ.47,248 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 ⭐இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு ரூ.48,534 கோடி நிதி ஒதுக்கீடு - அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை 2026: கனடாவை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது நியூசிலாந்து.

Today's Headlines

⭐ In Tamil Nadu, 33% Electric Buses by 2030: Chief Minister M. K. Stalin announced.

⭐ In the interim budget, ₹47,248 crore has been allocated to the agriculture sector.

⭐ In the interim budget, ₹48,534 crore has been allocated to the School Education Department, said Minister Thangam Thennarasu.

🏀 Sports News

🏀 In the ICC Men's T20 World Cup 2026, New Zealand defeated Canada by 8 wickets.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment