Wednesday, July 31, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 01.08.2024

 

பால கங்காதர திலகர்

 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: பெரியாரைத் துணைக்கோடல்

குறள் எண்:441

அறன்அறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
திறன் அறிந்து தேர்ந்து கொளல்.

பொருள்: அறம் உணர்ந்தவராய்த் தன்னைவிட மூத்தவராய் உள்ள அறிவுடையவரின் நட்பை, கொள்ளும் வகை அறிந்து ஆராய்ந்து கொள்ள வேண்டும்.

பழமொழி :

சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம

Practice makes perfect

இரண்டொழுக்க பண்புகள் : 

 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.

பொன்மொழி :

ஏமாற்றுவதைக் காட்டிலும் தோற்றுப்போவது மரியாதைக் குரியது.----ஆபிரகாம் லிங்கன்.

பொது அறிவு : 

1. நிலவு இல்லாத கோள்கள் எவை??

புதன் மற்றும் வெள்ளி

2. அதிக நிலவுகள் கொண்ட கோள் எது?

சனிக் கிரகம்

English words & meanings :

 treat-உபசரி,

 discuss-விவாதி

வேளாண்மையும் வாழ்வும் : 

மூங்கில் அரிசி
உறுதியான எலும்புகள் பெற உதவும். மூட்டுவலி, முதுகு வலி, முழங்காலில் ஏற்படும் வலிகள் அறவே குறையும். மூங்கில் அரிசி, இதன் சுவை கோதுமை போல் இருக்கும்.விளைவிக்க 30 முதல் 40 ஆண்டுகள் ஆகும்

ஆகஸ்ட் 01

பால கங்காதர திலகர் அவர்களின் நினைவுநாள்

பால கங்காதர திலகர் சூலை 231856 –1 ஆகத்து 1920 (அகவை 64), ஒரு இந்தியத் "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார்.

நீதிக்கதை

 சிட்டுக்குருவியும் காகமும் 

ஒரு காட்டில் சிட்டுக்குருவி ஒன்று வசித்து வந்தது. அது யாரிடமும் எளிதாக பழகாது, எப்போதும் அமைதியாக தான் உண்டு தன் வேலை உண்டு என்று வாழ்ந்து கொண்டு இருந்தது. அதற்கு சுயமாக யோசித்து  முடிவெடுக்கவும் தெரியாது. ஒரு நாள் காகம் ஒன்று அந்தச் சிட்டுக்குருவியிடம் கேட்டது,”சிட்டுக்குருவியே, நீ என்னுடன் நண்பனாக இருப்பாயா?” என்று. அந்த சிட்டுக்குருவியும் சரி என்று சொல்லி அந்த காகத்துடன் பழக ஆரம்பித்தது.

அப்போது சிட்டுக்குருவியிடம் மற்ற  பறவைகள்  கூறினார்கள், “சிட்டுக்குருவியே நீ காகத்துடன் பழகாதே, நிச்சயம் ஒருநாள் உனக்கு ஏதாவது பிரச்சனையை அந்த காகம் கொண்டு தரும்” என்றார்கள். ஆனால் சிட்டுக்குருவி அவர்கள் பேச்சுக்கு செவி கொடுக்காமல் காகத்துடன் நட்பாக பழக ஆரம்பித்தது. நாட்கள் கடந்தன 

அப்போது ஒரு நாள் காகம் சிட்டுக்குருவியிடம் கேட்டது, “நண்பா நாங்கள் வெளியே செல்கிறோம் நீ எங்களுடன் வருகிறாயா?” என்று. சிட்டுக்குருவியும் சரி நானும் வருகிறேன் என்று அந்த காகங்களுடன் சென்றது.

அந்த காகங்கள் அருகில் இருந்த ஒரு சோழ வயலில் புகுந்து அங்கு இருந்த அனைத்து சோள வகைகளை கொத்தி திங்க ஆரம்பித்தன. ஆனால் இந்த சிட்டுக்குருவியோ அமைதியாக ஒரு மரத்தில் அமர்ந்திருந்து. 

இந்த காகங்கள் சோளம் உண்ணுவதை பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது திடீரென்று அந்த விவசாய நிலத்தின் உரிமையாளர் ஓடி வந்தார், கையில் கம்போடு வந்து இந்த காகங்களை விரட்டினார்.

இந்தக் காகங்களும் பயத்தில் பறந்தன, அந்த காகங்கள் சிட்டுக்குருவியை தனியாக அங்கு விட்டு விட்டு  பறந்து சென்றன. ஆனால் சிட்டுக்குருவியோ மரத்தில் அமர்ந்து என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தது. 

அப்போது அந்த விவசாயி சிட்டுக்குருவியை நோக்கி கம்பை எடுத்துக் கொண்டு வந்தார். சிட்டுக்குருவி விவசாயிடம் சொன்னது, “ஐயா… நான் எந்த தவறும் செய்யவில்லை, நான் இந்த மரத்தில் சும்மாதான் அமர்ந்திருந்தேன் உங்களுடைய நிலத்தில் உள்ள எந்த சோளத்தையும் நான் உண்ணவில்லை” என்றது.

ஆனால் விவசாயி அந்த சிட்டு குருவியின் பேச்சை கேட்காமல் அந்த கம்பை எடுத்து சிட்டுக்குருவியை அடித்தார். சிட்டுக்குருவியும் கீழே விழுந்தது. அப்போதுதான் சிட்டுக்குருவி உணர்ந்தது, மற்ற பறவைகள் சொன்னதை நான் கேட்காமல் போனது என்னுடைய தவறுதான் என்று எண்ணி வருந்தியது. 

 நீதி : பிறர் நம் நன்மைக்காக கூறும் அறிவுரையை சற்று கேட்க வேண்டும்.

இன்றைய செய்திகள்

01.08.2024

🍁மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் கல்வி செயல்பாடுகளுக்காக நியமிக்கப்பட்ட தனி எழுத்தர்கள் இன்று பணியில் சேர உள்ள நிலையில் அவர்களின் பணி விவரங்களை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

🍁மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் அணையில் இருந்து உபரி நீரை 56 ஏரிகளுக்கு நிரப்பும் பணி தொடக்கம்.

🍁போராட்டம் நடத்தும் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

🍁கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர், விமானப்படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

🍁கர்நாடகாவில் தொடரும் கனமழை: 5 மாவட்டங்களுக்கு ‘ரெட் அலர்ட்’ .

🍁சீனாவில் கனமழை, வெள்ளம்; 7 பேர் பலி.

🍁ஒலிம்பிக்: டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை ஸ்ரீஜா அகுலா வெற்றி. காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி.

🍁ஒலிம்பிக் குத்துச்சண்டை காலிறுதி சுற்றுக்கு இந்திய வீராங்கனை லவ்லினா போர்கோஹைன் முன்னேறியுள்ளார்.

Today's Headlines

🍁The school education department has released the job details of the special clerks appointed for educational activities in the district collectorate offices today.

 🍁As the Mettur dam reaches its full capacity, the work of releasing the surplus water from the dam and filling  the 56 lakes has started.

 🍁School Education Minister Anbil Mahes Poiyamozhi has said that a good decision will be taken after holding talks with the protesting teachers.

🍁 As the death toll in the devastating landslide in Kerala's Wayanad continues to rise, the National and State Disaster Response Force, Air Force, and Firefighters are actively involved in rescue operations.

 🍁Heavy rains continue in Karnataka: 'Red Alert' for 5 districts.

 🍁Heavy rains, floods in China;  7 people died.

🍁 Olympics: Indian player Sreeja Akula wins table tennis tournament.  Qualified for the pre-quarter-final round.

🍁 Indian athlete Lovlina Borgohain has advanced to the Olympic boxing quarter-finals.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Tuesday, July 30, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.07.2024



 




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண்:430

அறிவுடையார் எல்லாம் உடையார்; அறிவிலார்
என்னுடைய ரேனும் இலர்.

பொருள்: அறிவுடையவர் (வேறொன்றும் இல்லாதிருப்பினும்) எல்லாம் உடையவரே ஆவர்; அறிவில்லாதவர் வேறு என்ன உடையவராக இருப்பினும் ஒன்றும் இல்லாதவரே ஆவர்.

பழமொழி :

அத்ருஷ்டமும் ஐஸ்வர்யமும் ஒருவர் பங்கல்ல;

Fortune’s wheel is ever revolving

இரண்டொழுக்க பண்புகள் : 

 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.

பொன்மொழி :

" தடம் பார்த்து நடப்பவன் மனிதன். தனக்கென தடம் பதித்து நடப்பவன் மாமனிதன்!---- பிடேல் காஸ்ட்ரோ

பொது அறிவு : 

1. என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்

விடை: திருநாவுக்கரசர்

2. தமிழ்நாட்டில் முக்கடல்களும் சந்திக்கும் இடம்

விடை: கன்னியாகுமரி

English words & meanings :

 concern-அக்கறை,

 cover-உறை

வேளாண்மையும் வாழ்வும் : 

விதைத்தபின் அறுவடைக்கு மட்டும் சென்று அறுவடை செய்து வந்தார்கள் நம் முன்னோர்கள். சர்க்கரை நோய், மலச்சிக்கல், புற்றுநோய்க்கு எதிரானது.

நீதிக்கதை

 ஒருவரை ஒருவர் குறை கூறுவது தவறு.


ஓர் ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி, இன்னொருவர்  குயவர். இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.


ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துக்  கொள்ளாமல் அரசரிடம் ஒருவர் பற்றி ஒருவர் குறை கூறிக்கொண்டு இருந்தனர்.


 குயவர், சலவை தொழிலாளியை அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, “அரசே, நமது பட்டத்து யானை கருப்பாக இருக்கிறது. யானையை சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள்” என்றார். 


அரசர்  சலவை தொழிலாளியை கூப்பிட்டு யானையை வெளுத்து வரும்படி கூறினார். உடனே சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து, “அரசே, யானையை வெளுத்து விடலாம் யானையை வேக வைக்கும் அளவிற்கு பெரிய பானை ஒன்றை குயவரை செய்து தர சொல்லுங்கள்” என்றார்.


அரசர் குயவரை கூப்பிட்டு, “யானையை வேக வைக்க பெரிய பானையை செய்து கொடு” என்று ஆணையிட்டார். குயவர் திரு திரு என விழித்தார்.


இருவரும் ஒருவர் மீது ஒருவர் குறை கூறுவதை அறிந்த அரசர், அவரவருக்கு இட்ட வேலையை செய்யவில்லை எனில் கடும் தண்டனை விதிக்கப்படும் என்றார்.


இருவரும் அரசரிடம் சென்று  தங்கள் தவறை உணர்ந்து கொண்டோம். இனிமேல் இதுபோல் நடக்க மாட்டோம் என்று மன்னிப்பு கூறினர். அரசரும் மன்னித்து அவரவர் வேலையை செய்ய உத்தரவிட்டார்.

 


இறுதியில் இருவரும் சந்தித்தனர். உன் மேல் நானும், என்மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே துன்பம். இனிமேல் இதுபோல் நடக்கக்கூடாது. இருவரும்  முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள். 


நீதி : ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வம்பில் மாட்டிக்கொண்டு விழிப்பதை விட, ஒருவர் மீது மற்றொருவர் குறை கூறுவதை விட்டு அவரவர் குறையை அவரவர் திருத்திக் கொண்டு வாழ்வது சிறந்ததாகும்.

இன்றைய செய்திகள்

31.07.2024

🌟அம்மா உணவகங்களை சீர்படுத்த ரூ.7 கோடி ஒதுக்கீடு: சென்னை மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்.

🌟இறப்பு, இடம் பெயர்தல் காரணமாக தமிழகத்தில் 4.49 லட்சம் குடும்ப அட்டைகள் ரத்து: கூட்டுறவு, உணவுத்துறை செயலர் தகவல்.

🌟மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம்: அரசு தொழில் வழிகாட்டி நிறுவனத்தின் தலைவர் தகவல்.

🌟கேரளாவின் வயநாட்டில் கனமழை காரணமாக நிலச்சரிவில் சிக்கி பலர்  உயிரிழந்த நிலையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

🌟லெபனானை தாக்க இஸ்ரேல் திட்டம்: இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க மத்திய அரசு அறிவுரை.

🌟பாரீஸ் ஒலிம்பிக்; அயர்லாந்தை வீழ்த்தி 2வது வெற்றியை பதிவு செய்த இந்திய ஆண்கள் ஹாக்கி அணி.

🌟பாரீஸ் ஒலிம்பிக் டென்னிஸ்: ரபேல் நடாலை வீழ்த்திய ஜோகோவிச்.

🌟மகளிர் டி20 தரவரிசை: ஏற்றம் கண்ட இந்திய வீராங்கனைகள்.

Today's Headlines

🌟Allocation of Rs 7 Crores for renovation of Amma restaurants: Resolution in Chennai Corporation meeting.

 🌟4.49 lakh family cards are cancelled in Tamil Nadu due to death and migration of places: Cooperatives and Food department Secretary informantion.

 🌟Tamil Nadu ranking first in the export of electronic goods: Information from the head of the Government Industry Guidance Institute.

🌟 Heavy rains in Kerala's Wayanad have left many people dead in landslides. Kerala faces a huge impact.

 🌟Israel Plans to Attack Lebanon: Central Govt Advises Indians to Stay Safe

 🌟Paris Olympics;  Indian men's hockey team beat Ireland to record its 2nd win.

🌟 Paris Olympics Tennis: Djokovic beats Rafael Nadal

 🌟Women's T20 Rankings: Indian players on the rise.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

Monday, July 29, 2024

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.07.2024

   

டாக்டர் முத்துலட்சுமி




திருக்குறள்: 

பால் :பொருட்பால்

அதிகாரம்: அறிவு உடைமை

குறள் எண் :429

எதிரதாக் காக்கும் அறிவினார்க்கு இல்லை
அதிர வருவதோர் நோய்.

பொருள்: வரப்போவதை முன்னே அறிந்து காத்துக்கொள்ள வல்ல அறிவுடையவர்க்கு, அவர் நடுங்கும் படியாக வரக்கூடிய துன்பம் ஒன்றும் இல்லை.

பழமொழி :

பேராசை பெரு நஷ்டம்

Much would have more, and lost all

இரண்டொழுக்க பண்புகள் : 

 *  நான் எப்போதும் அழகாகவும், தெளிவாகவும் எழுதுவேன்.                   

 *என் வாசித்தலை மேம்படுத்த தினமும் ஐந்து பக்கங்களாவது வாசிப்பேன்.

பொன்மொழி :

கற்றவர்களிடம் கற்பதை விட ... கற்றுக் கொண்டிருப்பவர்களிடம் கற்றுக்கொள்..! ----காரல் மார்க்ஸ்

பொது அறிவு : 

1. 24 மணி நேரத்தில் 3 அடி உயரம் வரை வளரக் கூடிய தாவரம் எது?

விடை: மூங்கில்

2. வருமான வரி என்பது

விடை: ஒரு நேர்முக வரி

English words & meanings :

 affair-விவகாரம்,

  title-தலைப்பு

வேளாண்மையும் வாழ்வும் : 

காட்டுயாணம் அரிசி:
இது பண்டைய தமிழர் பயன்படுத்திய அரிசி வகையாகும். இது மானாவாரி பயிராகும், காட்டில் வாழும் யானையின் உடலின் எடையை தாங்கும் கால்கள் போல, வலிமையான எலும்புகள் பெற உதவும்

ஜூலை 30

டாக்டர் முத்துலட்சுமி அவர்களின் பிறந்த நாள்

முத்துலட்சுமி (Muthulakshmi )(சூலை 30, 1886 - சூலை 22, 1968) மருத்துவர்சமூகப் போராளி, தமிழார்வலர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார். 1912 ஆம் ஆண்டு சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவப் பட்டம் பெற்று மருத்துவச் சேவையாற்றினார். இந்தியப்பெண்கள் சங்கத்தின் முதல் தலைவராகவும் பணியாற்றினார். இந்திய அரசாங்கத்தின் பத்மபூசண் விருதைப் பெற்றுள்ளார்.[

நீதிக்கதை

 பேராசை மனநிம்மதியைக் கெடுக்கும்.


ஓர் ஊரில் விறகு வெட்டி ஒருவன் இருந்தான். நாள்தோறும் அவன் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி, அவற்றை மக்களிடம் விற்று, அதனால் கிடைக்கும் வருமானத்தில் வாழ்ந்து வந்தான். இதில் அவனுக்குத் குறைந்த வருமானமே கிடைத்தது என்றாலும், மனநிம்மதியோடு வாழ்ந்து வந்தான். 


ஒருநாள் அவன் வழக்கம் போல் காட்டில் விறகு வெட்டிக் கொண்டிருக்கும்போது                   ஓர் அரசமரத்தின்   பக்கமிருந்து, “உனக்கு ஏழு ஜாடி தங்கம் வேண்டுமா?” என்று குரல் கேட்டது.


விறகுவெட்டி அந்த மரத்தின் அருகில் சென்றான். “நான் இந்த மரத்தில் வசிக்கும் அரக்கன். இந்த அரசமரத்தின் கீழே ஏழு ஜாடி நிறைய தங்கம் இருக்கிறது. உனக்குத் தேவையானால் தோண்டி எடுத்துக்கொள்” என்றது அந்தக் குரல். 


விறகு வெட்டி, “ஏழு ஜாடி தங்கம்” என்றதும் மிகவும் மகிழ்ந்தான். அவசர அவசரமாக அந்த மரத்தின் கீழே பள்ளம் தோண்டினான். அரக்கன் சொன்னது போலவே, பூமிக்குள் ஏழு ஜாடிகள் இருந்தன. விறகு வெட்டி எல்லா ஜாடிகளையும் திறந்து பார்த்தான். அவற்றின் உள்ளே தங்கம் இருந்தது. 


ஆனால், ஒரே ஒரு ஜாடியில் மட்டும் பாதியளவுதான் தங்கம் இருந்தது. “பாதிதானே குறைகிறது… இதை எப்படியும் நாம் நிரப்பி விடலாம்” என்று எண்ணி, ஏழு ஜாடிகளையும் தனது வீட்டுக்குக் கொண்டு வந்தான் விறகு வெட்டி. வீட்டுக்கு வந்ததும், ஏற்கெனவே தன்னிடமிருந்த தங்க நகைகளைப் பாதியளவு இருந்த ஜாடியில் போட்டான். பிறகு ஜாடி நிறையத் தங்கம் சேர்க்க வேண்டும் என்பதற்காக முன்பை விடக் கடினமாக உழைத்துப் பணம் சம்பாதித்தான். அதனைத் தங்கமாக்கி அந்தச் ஜாடிக்குள் போட்டான். 


அவன் எவ்வளவு தங்கத்தைச் ஜாடியில் போட்டாலும் ஜாடி நிரம்பவே இல்லை. விறகு வெட்டியும் விடவில்லை, எப்படியாவது அந்த ஜாடி நிரம்பத் தங்கத்தைச் சேர்த்துவிட வேண்டும் என்று இரவு பகலாக உழைத்தான். இதனால் அவன் நிம்மதி போயிற்று, தூக்கம் போயிற்று. உணவு உண்ணவும் மறந்தான்.


 இறுதியில் அவன் துரும்பாக இளைத்து விட்டான்.  ஒருநாள் அவன் நண்பன் ஒருவனைப் பார்த்தான். அவன் விறகு வெட்டியின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்பட்டான். அவனுடைய நிலைமைக்குக் காரணம் என்னவென்று கேட்டான். விறகு வெட்டி நடந்த கதை அனைத்தையும் கூறினான். 


விறகு வெட்டி சொன்னதைக் கேட்ட அவன், “இந்த ஏழு ஜாடி தங்கத்திற்கு ஆசைப்பட்டு  மனநிம்மதியைக் கெடுத்துக் கொண்டாயா?"என்றான்.


” அப்படியானால் நான் இப்பொழுது என்ன செய்வது? என்று கேட்டான் விறகு வெட்டி. இந்த ஜாடிகளை எடுத்துச் சென்று முன்பிருந்த இடத்திலேயே புதைத்து விட்டு, “பேராசையைத் தூண்டி விட்டு மன நிம்மதியைக் கெடுக்கும் உன் ஏழு ஜாடி தங்கத்தை நீயே வைத்துக் கொள்” என்று அரக்கனிடம் கூறிவிட்டு வந்துவிடு என்றான் விறகு வெட்டியின் நண்பன். 


விறகு வெட்டியும், மறுநாள் தன் நண்பன் கூறியபடியே ஏழு ஜாடிகளையும் எடுத்துச் சென்று அரச மரத்தடியில் புதைத்து விட்டு நண்பன் தன்னிடம் கூறியபடியே அரக்கனிடம் கூறிவிட்டு தன் வீட்டிற்கு வந்தான். அதற்கு பிறகு விறகு வெட்டியின் பேராசை முழுவதும் தணிந்திருந்தது. அவன் மனநிம்மதியுடன் வாழ்ந்தான்.


நீதி: ஏதாவதொரு பொருளின் மீது நாம் பேராசை பட்டால் நமது மனநிம்மதிதான் கெடும். எனவே, ஆசையை அளவோடு வைத்துக் கொண்டு வாழப் பழக வேண்டும்.

இன்றைய செய்திகள்

30.07.2024

🍄தனியார் மருத்துவமனைகளிலும் இனி குழந்தைகளுக்கான இலவச தடுப்பூசிகள்: தமிழக அரசு திட்டம்.

🍄தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர் பட்டியல் கோரியது மாநில தேர்தல் ஆணையம்.

🍄மேட்டூர் அணை நீர் திறப்பு 20,000 கன அடியாக அதிகரிப்பு: 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை.

🍄கல்லீரல் அழற்சி நோய்களை ஒழிக்க, பிறக்கும் குழந்தைகளுக்கு மறக்காமல் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை ஆரம்ப சுகாதார நிலையங்களில் இலவசமாக செலுத்திக் கொள்ளலாம் என்று தமிழக பொதுசுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

🍄கடந்த 5 ஆண்டுகளில், 633 இந்திய மாணவர்கள் விபத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளனர் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🍄காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 10,000 மாணவர்கள் மற்றும் 400 ஆசிரியர்கள் பலியாகியுள்ளதாக பாலஸ்தீன கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

🍄பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள்: ஆடவர் ஒற்றையர் பேட்மிண்டனில் இந்தியாவின் பிரனாய் வெற்றி.

🍄2-வது டி20 போட்டி: இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது இந்தியா.

🍄 2-வது மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி வாஷிங்டன் ப்ரீடம் சாம்பியன்.

Today's Headlines

🍄Free vaccinations will be provided for all children even in private hospitals too: Tamil Nadu Govt plan.

 🍄Tamil Nadu Local Elections will be conducted Soon: State Election Commission Requests Voter List.

🍄 Mettur dam water release raised to 20,000 cubic feet: Flood alert for 11 districts

 🍄Selva Vinayak, Director of Tamil Nadu Public Health Department, said that hepatitis B vaccine can be administered free of charge to primary health centers to eliminate liver inflammation diseases.

 🍄In the last 5 years, 633 Indian students have died abroad due to various reasons including accidents, according to the Ministry of External Affairs.

🍄 According to the Palestinian Ministry of Education, 10,000 students and 400 teachers have been killed so far in the Israeli attack on the Gaza Strip.

🍄 Paris Olympics: India's Pranai wins men's singles badminton

🍄 2nd T20: India beat Sri Lanka to clinch the series.

 🍄 Washington Freedom defeated San Francisco in the 2nd Major League Cricket Series and won the championship.
 Prepared by

Covai women ICT_போதிமரம்