Wednesday, February 25, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 26.02.2026




 






திருக்குறள்: 

குறள் 565: 

அருஞ்செவ்வி இன்னா முகத்தான் பெருஞ்செல்வம் 
பேஎய்கண் டன்ன துடைத்து. 

விளக்க உரை: 

எளிதில் காணமுடியாத அருமையும், இனிமையற்ற முகமும் உடையவனது பெரிய செல்வம், பேய் கண்டு காத்திருப்பதைப் போன்ற தன்மையுடையது.

பழமொழி :

Anything valued where it belongs. 

எதுவும் இருக்கிற இடத்திலே இருந்தால் தான் மதிப்பு.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நாம் துன்பப்படுவது நமது செயல்களின் காரணமாகத்தான் . அதற்கு கடவுள் பொறுப்பல்ல - சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.இந்தியாவில் முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்ட முதல் ரயில் எது?

ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் 
Howrah Rajdhani Express

02.தமிழ்நாட்டின் மிக உயரமான மலை சிகரம் எது,?
 
தொட்டபெட்டா -Doddabetta

English words :

rapple -struggle

Contronymn - a word with opposite meaning

தமிழ் இலக்கணம்: 

 "இரண்டு மூன்று நாளில் எல்லாம் சரியாகி விடும்" 

மருத்துவமனையில் இருப்பவரை பார்க்க செல்லும் போது இப்படி சொல்வது உண்டு. இது சரியானதா?

இரண்டு மூன்று என்று ஏறு வரிசையில் சொல்லும் போது இன்னும் நிறைய நாட்கள் ஆகலாம் என்று பொருள் வந்து விடும்.

பிறகு எது சரியான சொற்றொடர்?

 இரண்டொரு நாளில் சரியாகி விடும்.

என்பதே சரி. இதில் இறங்கு வரிசையில் சொல்வதால் விரைவில் குணமாகி விடும் என்று பொருள் படும்.

அறிவியல் களஞ்சியம் :

சந்திரன் பூமிக்கு மிக அருகில் இருந்ததால், அதன் தாக்கத்தால், பூமியிலிருந்து கோண உந்தத்தை மாற்றி, அதன் சுழற்சியை மெதுவாக்கும் வலுவான அலைகளை ஏற்படுத்தியது. தற்போதைய 24 மணி நேர நாள் என்பது பூமியின் 4.5 பில்லியன் ஆண்டு வரலாற்றில் ஒப்பீட்டளவில் சமீபத்திய வளர்ச்சியாகும்.

நீதிக்கதை

 நொண்டி குதிரை

காட்டில் அடர்ந்த புல்வெளியில் ஏராளமான குதிரைகள் வசித்து வந்தன. அந்தக் குதிரைகளின் கூட்டத்தில் நொண்டிக் குதிரை ஒன்றும் இருந்தது. மற்றக் குதிரைகள் எல்லாம் அந்த நொண்டிக் குதிரையை மட்டமாகவே நினைத்தன. எல்லாக் குதிரைகளும் அந்தப் புல்வெளியில் ஓடியாடி விளையாடுகின்ற நேரத்தில் அந்த நொண்டிக் குதிரையானது அமைதியுடன் ஒரிடத்தில் படுத்திருக்கும். அதனால், மற்ற குதிரைகள் எல்லாம் அதனை சோம்பேறி என்று கேலி செய்தன. 

நண்பர்கள் எல்லாம் தன்னைக் கேலி செய்கிறார்களே என்று நொண்டிக் குதிரைக்கு சற்று வருத்தமாகயிருந்தது. நண்பர்கள் எல்லாம் அறியாமையின் காரணமாக இப்படிக் கேலி செய்கின்றனர். அதனால் நாம் அவர்களின் மீது கோபப்படுவது நல்லதல்ல... என்று முடிவு செய்தது அந்த நொண்டிக் குதிரை. ஒருநாள் சிங்கம் ஒன்று அந்தப் புல்தரையில் பக்கமாக வந்தது. அந்த இடத்தில் ஏராளமான குதிரைகள் புற்களை மேய்ந்தபடி நின்று கொண்டிருப்பதைப் பார்த்தது. 

புல்தரையின் ஓர் ஓரத்தில் படுத்திருந்த நொண்டிக் குதிரை, சிங்கத்தை கவனித்து விட்டது. இந்தச் சிங்கம் நம்மையும், நம் நண்பர்களையும் கவனித்து விட்டது. நிச்சயமாக இதனால் நமக்கு ஆபத்து நேரிடும். உடனடியாக இதனைப்பற்றி நம் நண்பர்களுக்கு எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று நினைத்தது அந்தக் குதிரை. 

நண்பர்களே, சற்று நேரத்திற்கு முன்னர் சிங்கராஜா மறைந்திருந்து நம்மையெல்லாம் கவனித்துச் சென்றுவிட்டார். இன்னும் ஓரிரு நாட்களில் அவரால் நமக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ள, உடனடியாக இந்த புல்வெளியினை விட்டு வேறு இடத்திற்குச் சென்றுவிட வேண்டும், என்றது. 

நொண்டிக் குதிரையின் பேச்சைக்கேட்ட மற்ற குதிரைகள் எல்லாம் சிரித்தன. நொண்டிக் குதிரையின் வார்த்தைகளை மற்ற குதிரைகள் சிறிதும் பொருட்படுத்தவில்லை. சிங்க ராஜாவின் பிடியில் இருந்து எப்படியாவது நண்பர்களை காப்பாற்ற வேண்டும். எப்படி காப்பாற்றுவது என்று யோசித்தது. திடீரென அதன் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. அதன்படி அந்தக் குதிரையானது சிங்கத்தைத் தேடிச் சென்றது. தன் எதிரே தைரியத்துடன் ஒரு குதிரை நொண்டியபடி வருவதை, வியப்போடு பார்த்தது சிங்கம். 

சிங்க ராஜாவே, வணக்கம். என் வருகை உங்களுக்கு வியப்பினை ஏற்படுத்தலாம். இருந்தாலும் உங்களுக்கு சந்தோஷமான செய்தி சொல்லவே வந்துள்ளேன். என்னை நம்புங்கள், என்று பணிவோடு கூறியது குதிரை. சிங்க ராஜா! குதிரையைப் பார்த்து, என்னை எதற்காக சந்திக்க வந்திருக்கிறாய் என்று கேட்டது? அதற்கு நொண்டிக் குதிரை, சிங்க ராஜாவே, ஒருநாள் நானும் என் நண்பர்களும் புல்தரையில் நின்றபோது மறைந்திருந்து நீங்கள் எங்களை கவனித்து விட்டீர்கள். தங்கள் மூலம் என் நண்பர்களுக்கு ஆபத்து ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்தேன். அதனால் தான் அதனைத் தடுக்க வேண்டி ஓடோடி வந்தேன். 

சிங்க ராஜாவே! நான் என் நண்பர்களை, என் உயிரை விட மேலாக மதித்து வருகிறேன். ஆகையால் என் நண்பர்களை காப்பாற்ற நானே என் உயிரைக் கொடுத்து உங்களுக்கு விருந்தாக வந்துள்ளேன். நீங்கள் என்னைச் சாப்பிடுங்கள். என் நண்பர்களை விட்டு விடுங்கள் என்று கெஞ்சிக் கேட்டது நொண்டிக் குதிரை. தன் நண்பர்களுக்காக இந்த அளவுக்கு கெஞ்சும் நொண்டிக் குதிரையைக் கண்டு சிங்கத்தின் மனம் மேலும் இளகியது. உன்னுடைய உயர்ந்த குணத்தைப் பற்றி அவர்களுக்கு எடுத்துரைக்கிறேன் என்று கூறி குதிரையை தன்னுடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டது சிங்கம். 

நொண்டிக் குதிரை சிங்கத்தோடு வருவதைக் கண்டதும் எல்லாக் குதிரைகளும் திடுக்கிட்டன. உடனே சிங்கம், நீங்கள் யாரும் என்னைக் கண்டு பயப்பட வேண்டாம். நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன். நான் உங்களின் நண்பனான நொண்டிக் குதிரையை நீங்கள் இவ்வளவு நாட்களாக உங்களில் ஒருவனாக எண்ணாமல் அதன் மனத்தை புண்படுத்தி வந்தீர்கள். 

ஆனால், உங்கள் நண்பனான இவனோ, என்னால் உங்களுக்கு வரப்போகின்ற ஆபத்தைத் தடுத்து, உங்களுக்காக எனக்கு விருந்தாக உணவளிக்க வந்தது. இவ்வளவு நல்ல குணங்களைக் கொண்ட இந்த குதிரையின் மனதை இவ்வளவு நாட்களாகப் புண்படுத்தி வந்துள்ளீர்கள். இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் என்றது சிங்கம். சிங்கத்தின் பேச்சைக் கேட்டதும் எல்லா குதிரைகளும் தலை குனிந்தன. அன்போடு அந்த நொண்டிக் குதிரையினை சூழ்ந்து கொண்டன. அதனைக் கண்டு சிங்கமும் மகிழ்ச்சியடைந்தது. 

நண்பா, உனக்கு கால்தான் ஊனம். ஆனால், எங்களுக்கோ மனமே ஊனமாகி விட்டது. உன் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டோம். குதிரைகள் அனைத்தும் நொண்டி குதிரையிடம் எங்களை மன்னித்து விடு என்று மன்னிப்பு கேட்டன. குதிரைகள் அனைத்தும் நொண்டிக் குதிரையை புரிந்து கொண்டதைப் பார்த்து சிங்கம் மிகவும் மகிழ்ச்சியடைந்தது.

இன்றைய செய்திகள்

26.02.2026

⭐ தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடியாக உள்ளது.SIR ல் விடுபட்ட சுமார் 29 லட்சம் பேர் தங்களது பெயரை மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைத்துள்ளனர்.

⭐ கன்னியாகுமரியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் மினி டைடல் பூங்கா - முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

⭐தமிழக போலீஸ் துறையில் புதிய மென்பொருள் - முதலமைச்சர் இன்று தொடங்கி வைக்கிறார்.

⭐இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு காலமானார்; அவருக்கு வயது 101. தோழர் நல்லக்கண்ணுவின் உடல் அவரது விருப்பப்படியே  மாணவர்களின் கல்விக்காக சென்னை மருத்துவ கல்லூரிக்கு தானமாக ஒப்படைக்கப்படுகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இந்தத் தொடரின் சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளன. இந்த நிலையில், இன்று (பிப். 26) நடைபெறும் சூப்பர் 8 சுற்றுப் போட்டியில் இந்திய அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொள்கிறது.

Today's Headlines

⭐ Tamil Nadu's total voters are 5.67 crore. About 29 lakh people who were left out of the SIR have re-registered their names.

⭐ Mini Tidal Park in Kanyakumari at an estimated cost of Rs. 30 crore - Chief Minister laid the foundation stone.

⭐ New software in the Tamil Nadu Police Department - Chief Minister to launch today.

⭐ Senior leader of the Communist Party of India, Nallakannu, passes away; He was 101 years old. Comrade Nallakannu's body is being donated to the Chennai Medical College for the education of students as per his wishes.

🏀 Sports News

🏀 The T20 World Cup cricket series is being held in India and Sri Lanka. The Super 8 round matches of this series have reached a thrilling stage. In this situation, the Indian team will face the Zimbabwe team in a Super 8 round match today (Feb. 26).

Covai women ICT_போதிமரம்

Tuesday, February 24, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 25.02.2026


  


 






திருக்குறள்: 

அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை 

குறள் 561: 

தக்காங்கு நாடித் தலைச்செல்லா வண்ணத்தால் 
ஒத்தாங் கொறுப்பது வேந்து. 

விளக்க உரை: 

செய்த குற்றத்தை தக்கவாறு ஆராய்ந்து மீண்டும் அக் குற்றம் செய்யாத படி குற்றத்திற்குப் பொருந்துமாறு தண்டிப்பவனே அரசன் ஆவான்.

பழமொழி :

Laughter is the best medicine. 

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

தூய்மை, பொறுமை, விடாமுயற்சி இந்த மூன்று நற்குணங்களுடன் அன்பும் சேர்ந்து விட்டால் உலகமே சொர்க்கமயமாகிவிடும்        

விவேகானந்தர்

பொது அறிவு : 

01.ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை நூல்  எது?

சந்தியா சங்கீத்' (Sandhya Sangit - மாலைக்கால கவிதைகள்)

02."சிலம்புச் செல்வர்"என்று அழைக்கப்படும் தமிழறிஞர் யார்?

 ம.பொ. சிவஞானம் (மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானம்)
Mylai Ponnuswamy Sivagnanam.

English words :

Terminate –to end, முடிவுறுதல், முடிவுறச் செய்தல்

culminate –to reach a final result.

இறுதி முடிவை எட்டுதல்

தமிழ் இலக்கணம்: 

 நர்/ னர் 
எந்த விகுதி எந்த வார்த்தையின் பின் வரும் என்பதை இன்று பார்க்கப் போகிறோம்.
கட்டளை சொல்லின் பின்னால் 
 நர் வரும். மற்ற சொற்களின் பின்னால் னர் வரும் 
* அனுப்பு (கட்டளை) = அனுப்புநர்
* பெறு (கட்டளை) = பெறுநர்
* அளித்த (கட்டளை இல்லை) = அளித்தனர்
* பேசி (கட்டளை இல்லை) = பேசினர்

அறிவியல் களஞ்சியம் :

துவக்கத்தில் பூமியின் விரைவான சுழற்சியால் ஒரு நாள் = 6 மணி நேரம் இருப்பினும் சில மதிப்பீடுகள் சந்திரனை உருவாக்கிய மாபெரும் மோதலுக்குப் பிறகு உடனடியாக 4 மணி நேரம் வரை குறுகியதாக இருந்தது. ஒரு நாளின் நீளம் காலப்போக்கில் அதிகரித்து, சுமார் 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன், ஒரு நாள் என்பது, சுமார் 12 மணி நேரத்தையும், சுமார் 1 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 19 மணி நேரத்தையும் எட்டியது.

நீதிக்கதை

 தேவதை கொடுத்த பரிசு

ஒரு கிராமத்தில் இரண்டு மீனவர்கள் நண்பர்களாக இருந்தனர். ஒரு நண்பரின் பெயர் மதன். மற்றவன் பெயர் குணா. இருவரும் தினமும் காலை நேரத்தில் கட்டு மரத்தில் ஏறி, மீன் பிடிக்கச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

ஒருநாள் காலை நேரத்தில் இருவரும் வழக்கம் போல் மீன் பிடிக்கச் சென்றனர். அன்றைய தினம் மாலை நேரம் ஆகியும் கூட இருவர் வலையிலும் போதுமான மீன்கள் சிக்கவில்லை. மிகக் குறைந்த அளவிலேயே மீன்கள் மாட்டின. கரையை அடைந்த இருவரும் தங்களுக்குக் கிடைத்த மீனைப் பங்கிட்டுப் பார்த்தனர்.

நண்பனே! இந்த மீன்களை விற்று அதில் கிடைக்கும் பணத்தில் நம் இருவர் குடும்பத்திற்கும் போதிய உணவுப்பொருட்களை வாங்கிச் சமைப்பது கடினம். அதனால், மீன் விற்றுக் கிடைக்கும் பணத்தினை நம்மில் ஒருவரே எடுத்துக் கொள்ளலாம் என்றான் குணா.

அப்படியானால் நீயே எடுத்துக்கொள். நீதான் மனைவி, மக்களோடு இருக்கிறாய். உன் குடும்பத்தை வறுமையில் வாடவிடாதே. நீயே எடுத்துக்கொள் என்றான் மதன். இல்லை நண்பனே. உன் குடும்பத்தில் இரண்டு நபர்கள் அதிகமாக இருக்கின்றனர். அதனால் நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றான் குணா.

இல்லை நண்பனே, இல்லை கண்டிப்பாக நீதான் எடுத்துக் கொள்ள வேண்டும். உன் குடும்பத்தை வறுமையில் தவிக்க நான் என்றுமே விடமாட்டேன், என்று அழுத்தமாகக் கூறினான் மதன். ஒருவரையொருவர் இவ்வாறு விட்டுக்கொடுக்காமல், தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் திடீரென சத்தம் கேட்டது. இருவரும் திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தனர். அங்கே கடற்கரையில் ஓர் அழகிய பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள். 

அந்தப் பெண்ணைப் பார்த்த மாத்திரத்தில் இருவரும் திகைப்புடன் வாயடைத்துப் போயினர். அந்தப் பெண் தேவதை போன்று காட்சி தந்தாள். அந்தப் பெண்ணின் முகத்தை இருவரும் உற்றுப் பார்த்தனர். மீனவர்களே, என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்! நான்தான் இந்தக் கடலில் வசிக்கிற கடல் தேவதை. நீங்கள் இருவரும் ஏதோ வழக்கு நடத்திக் கொண்டிருப்பது போன்று தெரிகிறது. அது என்னவென்று அறிந்துகொள்ள வேண்டியே உங்கள் அருகில் வந்தேன், என்றாள் கடல் தேவதை.

தேவதையே! உன்னை சந்தித்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாங்கள் இருவரும் பிடிக்கிற மீன்களை பங்கு போட்டுக் கொள்வோம். இப்போது எங்களுக்குக் குறைந்த அளவே மீன்கள் கிடைத்துள்ளன. என் குடும்பம் வறுமையில் வாடும், அதனால் மீன்களை எடுத்துக்கொள் என்கிறான் என் நண்பன்.

என் குடும்பத்தைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆனால், அவன் குடும்பம் வறுமையில் வாடக்கூடாது என்பதற்காகத்தான் எல்லா மீன்களையும் விற்று கிடைக்கிற பணத்தை என் நண்பன் எடுத்துக்கொள்ளட்டும் என்று சொல்கிறேன். என் நண்பனோ, அதனை மறுத்து என்னை எடுத்துக்கொள்ளும்படியாகச் சொல்கிறான். நீயே அவனுக்கு எடுத்துக் கூறி அவன் குடும்பத்தை வறுமையில் இருந்து காப்பாற்று! என்றான் குணா.

கடல் தேவதையோ சிரித்தபடியே இருவரையும் நோக்கியது. நீங்கள் இருவரும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் உங்கள் குடும்ப நலன் கருதியே பேசிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் குடும்பத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் அன்பும், உங்கள் நல்லெண்ணமும் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது. அதனால் உங்கள் இருவருக்கும் உதவி புரியவே வந்துள்ளேன் என்றது கடல் தேவதை.

பிறகு, மதன் முன்பும், குணா முன்பும் இரண்டு மூட்டைகள் தோன்றின. கடல் தேவதையும் அங்கிருந்து மறைந்தாள். இருவரும் அந்த மூட்டைகளைப் பிரித்துப் பார்த்தனர். அந்த மூட்டைகளில் நிறையப் பொற்காசுகள் காணப்பட்டன. இருவருமே அதனை தங்கள் ஒற்றுமைக்குக் கிடைத்த பரிசாகவே நினைத்துக் கொண்டனர். அதைக் கொண்டு பெரிய பணக்காரர்கள் ஆனார்கள்.

இன்றைய செய்திகள்

25.02.2026

⭐திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவு வாயில் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

⭐இனி கேரளா அல்ல 'கேரளம்'... பெயர் மாற்றத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

⭐தமிழகத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

⭐தமிழ்நாட்டில் சுட்டெரிக்க தொடங்கிய வெயில்-அதிகபட்சமாக ஈரோட்டில் 100 டிகிரி பதிவு

⭐உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் மீண்டும் தீவிரமடைந்துள்ளதால், மாஸ்கோவின் 4 விமான நிலையங்களையும் மூடுவதாக ரஷ்யா அறிவித்துள்ளது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக்கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக  இந்திய அணி தோல்வியடைந்தபோதும் இந்திய வீரர் வருண் சக்ரவர்த்தி சாதனை படைத்திருக்கிறார்.இவர் ஐ.சி.சி. பந்து வீச்சுக்கான தர வரிசை பட்டியலில் முதல் இடம் பிடித்து உள்ளார்.

Today's Headlines

⭐ The Chief Minister inaugurated the silver jubilee entrance gate of the Thiruvalluvar statue.

⭐ No longer “Kerala” but “Keralam”… The Union Cabinet has approved the name change of Kerala!

⭐ The Election Commission of India has released the final electoral roll for Tamil Nadu.

⭐ The heat has started scorching in Tamil Nadu – the highest temperature of 100 degrees was recorded in Erode.

⭐ Due to the war between Ukraine and Russia intensifying again, Russia has announced the closure of four airports in Moscow.

🏀 Sports News

🏀 Although the Indian national cricket team lost to the South African national cricket team in the T20 World Cup match, Indian player Varun Chakravarthy has created a record. He has secured the number one position in the ICC bowlers' ranking. 

Covai women ICT_போதிமரம்

Monday, February 23, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.02.2026

ஸ்டீவ் ஜொப்ஸ்







திருக்குறள்: 

குறள் 215: 

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம் 
பேரறி வாளன் திரு.    

 விளக்க உரை: 

ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், ஊரார் நீருண்ணும் குளம் நீரால் நிறைந்தாற் போன்றது.

பழமொழி :

Pride goes before a fall. 

அகம்பாவம் அழிவை தரும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

நான் எதையும் சாதிக்க வல்லவன் என்று சொல் . நீ உறுதியுடன் இருந்தால் பாம்பின் விஷம் கூட சக்தியற்றதாகி விடும் .- சுவாமி விவேகானந்தர்

பொது அறிவு : 

01.அடால்ஃப் ஹிட்லர்  பிறந்த நாடு எது?

ஆஸ்திரியா-Austria

02.தமிழ்நாட்டின் முதல் கல் கோவில் (குடைவரைக் கோவில்) எது?

திரிமூர்த்தி கோவில்  மண்டகப்பட்டு -விழுப்புரம்

 Tirumurti Temple Mandagapattu

Villuppuram 

English words :

bountiful –abundant. அபரிதமான அளவு 

bonanza –a situation which creates a great profit

செல்வச்செழிப்பு

தமிழ் இலக்கணம்: 

விலங்குகளின் சரியான ஒலிக்கான வார்த்தை
ஆந்தை –அலறும்
யானை –பிளிரும் 
மயில் –அகவும் 
குயில் –கூவும்
புலி  –உறுமும்
சிங்கம் –கெர்ச்சிக்கும் 

அறிவியல் களஞ்சியம் :

பூமி உருவானபோது ஒரு நாளின் நேரம்(6 மணி): பூமி சுமார் 4.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானபோது, ​​ஒரு நாள் என்பது  சுமார் 6 மணி நேரம் மட்டுமே. சந்திரன் மிக நெருக்கமாக இருந்ததாலும், வேகமான கோளின் சுழற்சியாலும், பூமி இன்று இருப்பதைவிட கணிசமாக வேகமாகச் சுழன்றது. பில்லியன்கணக்கான ஆண்டுகளில், சந்திரனில் இருந்து வரும் அலை சக்திகள் படிப்படியாக இந்த சுழற்சியைக் குறைத்தன

பிப்ரவரி 24

ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.2011 ஆம் ஆண்டு அக்டோபர்  06 ஆம் திங்கள்  அதிகாலை ஸ்டீவ் ஜொப்ஸ்  உயிரிழந்தார்.

நீதிக்கதை

 பழைய நிலைமையை மறந்து விடாதே!

முன்னொரு காலத்தில், ஒரு நாட்டை ஆண்ட அரசரிடம் விவேகமிக்க மந்திரி ஒருவர் இருந்தார். அவர் பெயர் தனயன். அரசர், எங்கு சென்றாலும், தனயனை அழைத்துச் செல்வார். தனயனின் ஆலோசனைப்படியே அனைத்தையும் செய்வார்.

இதனால், மந்திரி தனயனின் புகழ், நாடு முழுவதும் பரவியது. இதைக்கண்ட சிலர், மந்திரி மீது பொறாமை கொண்டனர். தனயன் எங்கு சென்றாலும், தன்னுடன் ஒரு பெட்டியை எடுத்துச் செல்வது வழக்கம். பொறாமைக்காரர்கள் இதை வைத்தே அரசனிடம் கோள் மூட்ட எண்ணினர்.

அரசே, மந்திரி நல்லவர் போல் நடித்து, நம்மை ஏமாற்றுகிறார். அரண்மனையில் உள்ள விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் அபகரித்து தன் பெட்டியில் வைத்துள்ளார். வேண்டுமானால் அதைச் சோதனை செய்து பாருங்கள் என்றனர்.

அரசனுக்கும், சிறிது சந்தேகம் ஏற்பட்டது. ஒருநாள் வேட்டைக்குப் போகும்போது, மந்திரி வழக்கம் போல் பெட்டியை தன்னோடு எடுத்து வந்தார். பெட்டியில் என்ன? என்று கேட்டார் அரசர். உடனே மந்திரி, பெட்டியைத் திறந்து காட்டினார், ஆடு மாடு மேய்ப்பவன் உடுத்தும் கந்தல் துணி இருந்தது.

இதெல்லாம் என்ன? என்று ஆச்சர்யத்துடன் கேட்டார் அரசர். அரசே! ஆடு மேய்த்துக் கொண்டிருந்த போது, என் புத்திக்கூர்மையை பார்த்து, என்னை மந்திரி ஆக்கினீர்கள். இவ்வளவு உயர் பதவி கிடைத்தால், சிலர் பழைய நிலைமையை மறந்து விடுவர். எனக்கு அப்படியிருக்க மனம் வரவில்லை. பழைய நிலைமையை சுமந்தபடியே, மந்திரி பதவியில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான், இப்பெட்டியை எந்நேரமும் என்னுடன் வைத்திருக்கிறேன் என்றார் மந்திரி.

மந்திரியை பெரிதும் பாராட்டியதோடு, பொறாமைக்காரர்களுக்கு தக்க தண்டனையும் கொடுத்தார் அரசர். மந்திரிக்கு பல பரிசுகள் கொடுத்து கௌரவித்தார். பொறாமைக்காரர்கள், தாங்கள் செய்த சூழ்ச்சியே, தங்களது வீழ்ச்சிக்கு காரணமானதை எண்ணி வருந்தினர்.

நீதி : கேடு நினைப்பவன் கெடுவான்.

இன்றைய செய்திகள்

24.02.2026

⭐தமிழகத்தில் பனிப்பொழிவு தொடர்ந்து வரும் நிலையில், நிமோனியா எனப்படும் நுரையீரல் தொற்று பரவல் அதிகரித்து உள்ளது.

⭐ ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் போர் விமானங்கள் பெஹ்சுத் மாவட்டத்தில் நடத்திய தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர் பலியாகி உள்ளனர்.

⭐ஈரானை விட்டு வெளியேறுங்கள்.
இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று இந்திய அணி தென் ஆப்பிரிக்க அணியுடன் மோதியது. இந்த போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Today's Headlines

⭐ As cold weather continues in Tamil Nadu, the spread of the lung infection called pneumonia has increased.

⭐ In Afghanistan, 17 members of the same family were killed in an attack carried out by Pakistani warplanes in the Behsood district.

⭐ “Leave Iran.” The central government has strongly urged Indians.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the T20 World Cup series, the Indian team faced the South African team yesterday. In this match, the Indian team lost by a margin of 76 runs.

Covai women ICT_போதிமரம்

Sunday, February 22, 2026

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.02.20226

சீகன் பால்க்

 


 






திருக்குறள்: 

குறள் 213: 

புத்தே ளுலகத்தும் ஈண்டும் பெறலரிதே 
ஒப்புரவின் நல்ல பிற.       

விளக்க உரை: 

பிறர்க்கு உதவி செய்து வாழும் ஒப்புரவைப் போல நல்லனவாகிய வேறு அறப்பகுதிகளைத் தேவருலகத்திலும் இவ்வுலகத்திலும் பெறுதல் இயலாது.

பழமொழி :

Effort never fail. 

முயற்சி திருவினையாக்கும்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. உழைக்கப் பழகியவர் எங்கு இருந்தாலும் உயர்ந்த நிலையை அடைவர்.

 2.எனவே எப்போதும் உழைப்பை நாடுவேன்.

பொன்மொழி : 

எதையும் உங்களால் சாதிக்க முடியும் என்று நம்புங்கள். இறைவன் நமது பக்கம் இருக்கிறார் என அறிந்து கொள்ளுங்கள் - சுவாமி விவேகானந்தர்.

பொது அறிவு : 

01.இந்தியாவில் இருந்து அண்டார்டிகா சென்ற முதல் பெண் விஞ்ஞானிகள் யார்?

சுதிப்தா சென்குப்தா மற்றும் அதிதி பந்த் 

 Sudipta Sengupta and Aditi Pant

02.சுதந்திர இந்தியாவின் முதல் பாதுகாப்பு அமைச்சராக பணியாற்றியவர் யார்?

சர்தார் பல்தேவ் சிங் 

Sardar Baldev Singh

English words :

Bravely -courageously

Circumnavigate-Sail around

தமிழ் இலக்கணம்: 

 தேனீர் தேநீர் எது சரி? என்று பார்ப்போம் வாருங்கள்

முதலில் பிரித்து பார்க்க வேண்டும் 
தேனீர் = தேன்+நீர் என்று வரும். இதன் பொருள் தேன் கலந்த நீர் என்பதாகும்
தேநீர் = தே+ நீர் என்று வரும். 
தே என்ற சொல்லுக்கு இனிமை, இறைவன், தேயிலை என்று மூன்று பொருள் வரும். 
இங்கு தேயிலை கலந்த நீர் தேநீர் என்று வரும். எனவே *தேநீர்* தான் சரி

அறிவியல் களஞ்சியம் :

விஞ்ஞானிகள் கணக்கிட்டபடி, ஒரு நூற்றாண்டுக்கு சராசரியாக 2 மில்லி வினாடிகள் (ஆயிரத்தில் ஒரு வினாடியில் இரண்டு பங்கு) அளவு பூமியின் சுழற்சி மெதுவாகி/குறைந்து கொண்டிருக்கிறது. இதன் பொருள், 25 கோடி ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்கள் வாழ்ந்த காலத்தில், அவைகளின் நடமாட்டம் இருந்த காலத்தில், ஒரு நாள் என்பது சுமார் 23 மணி நேரம் ஆகும்.

பிப்ரவரி 23

சீகன் பால்க் அவர்களின் நினைவுநாள்

சீகன் பால்க் (Bartholomäus Ziegenbalg, ஜூலை 10, 1682 - பெப்ரவரி 23, 1719) என்பவர் செருமனியைச் சேர்ந்த லூத்தரன் பாதிரியார். தமிழ்நாட்டிற்குச் சென்ற முதலாவது புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ மத போதகர் ஆவர். 1714 ஆம் ஆண்டு பர்த்தலோமேயு சீகன்பால்குவினால் முதன்முதலில் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. இந்திய மொழிகளில் தமிழில்தான் விவிலியம் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சேறியது.இந்தியாவிற்கு அச்சு இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதோடு தமிழில் அச்சு எழுத்துகளையும் உருவாக்கினார். 

நீதிக்கதை

 அன்பை அடைக்க கதவு உண்டோ?


ஒரு நாள் கடை தெருவின் வழியே ஒரு ஐந்து வயது சிறுவன் தன் மூன்று வயது தங்கையை அழைத்து கொண்டு சென்று கொண்டு இருந்தான். ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மையை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, எந்த பொம்மை வேண்டும் என்றான். அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து அந்த பொம்மை என்ன விலை என்று கேட்டான். 


அதற்கு அந்த கடையின் முதலாளி சிரித்துக்கொண்டே, உன்னிடம் எவ்வளவு உள்ளது என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் தான் விளையாட சேர்த்து வைத்து இருந்த அந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்துவிட்டு, கடைக்காரரைப் பார்த்து இது போதுமா? என்று கவலையுடன் கேட்டான். அதற்கு அந்த கடைக்காரர், அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே, எனக்கு நான்கு சிப்பிகள் போதும் என்றுக்கூறி மீதமுள்ள சிப்பிகளை அந்த சிறுவனிடம் திருப்பிக் கொடுத்தார். சிறுவன் மகிழ்ச்சியோடு மீதி உள்ள சிப்பிகளோடும், தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்து கொண்டு சென்றான்.


இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த, அந்த கடையின் வேலையாள் முதலாளியிடம், ஐயா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே ஐயா, என்றான். 


அதற்கு அந்த முதலாளி அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும் என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை. நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் பணம்தான் உயர்ந்தது என்ற மாற்றம் வந்து விடும். அதை தடுத்து விட்டேன். 


மேலும் தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கி தர முடியும் என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன். என்றாவது ஒரு நாள் அவன் பெரியவனான பிறகு இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில் இந்த உலகம் நல்லவர்களால் ஆனது என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும். ஆகையால் அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான் என்றார்.

இன்றைய செய்திகள்

23.02.2026

⭐வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அடிக்கல் நாட்டினார் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன்

⭐டிரம்ப் விதித்த பரஸ்பர வரியை அமெரிக்க சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது. இருப்பினும் உலக நாடுகளுக்கு டிரம்ப் புதிதாக 15 சதவீத வரிவிதித்துள்ளார்.

⭐எல் சால்வடார் மற்றும் மெக்சிகோ கடற்படைகள் சுமார் 10 டன் அளவிலான போதைப்பொருட்களை பறிமுதல் செய்துள்ளன.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்று: இலங்கையை வீழ்த்தி இங்கிலாந்து அபார வெற்றி

Today's Headlines

⭐ The foundation stone for the statue of V. O. Chidambaranar was laid by Vice President C. P. Radhakrishnan.

⭐ The U.S. Supreme Court has canceled the reciprocal tax imposed by Donald Trump. However, Trump has newly imposed a 15% tax on countries around the world.

⭐ The navies of El Salvador and Mexico have seized approximately 10 tons of illegal drugs.

🏀 Sports News

🏀 In the Super 8 round of the ICC Men's T20 World Cup, England achieved a magnificent victory by defeating Sri Lanka.

Covai women ICT_போதிமரம்