Tuesday, November 18, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.11.2025

இந்திரா காந்தி







திருக்குறள்: 

குறள் 356: 

கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவர் 
மற்றீண்டு வாரா நெறி. 

விளக்க உரை: 

கற்க வேண்டிய வற்றைக் கற்று இங்கு மெய்ப் பொருளை உணர்ந்தவர் , மீண்டும் இப்பிறப்பிற்கு வராத வழியை அடைவர்.

பழமொழி :

If the intention to achieve is deep in your heart, you can achieve anything with your consistent effort. 

சாதிக்கும் எண்ணம் ஆழ்மனதில் தோன்றி விட்டால், உன் விடா முயற்சியால் எதையும் சாதிக்கலாம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.


2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

அனுபவம் என்பது சிறந்த ஆசிரியர். நமக்கு பலவற்றை கற்றுக் கொடுக்கிறது - பிளினி.

பொது அறிவு : 

01.ரப்பர் தயாரிக்க தேவைப்படும் மூலப் பொருள் எது?

ரப்பர் மரத்தின் பால்-லேடெக்ஸ்
natural latex from rubber trees

02. இந்தியாவில் கருப்பு மிளகு அதிகமாக விளையும் மாநிலம் எது?

கர்நாடகா- Karnataka

English words :

perplexed-confused

mischief-playful behaviour

தமிழ் இலக்கணம்: 

 'ன' என்ற எழுத்துக்கு றன்னகரம் என்றும் பெயர் உண்டு.இது வரும் சொற்களில், அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ற' வர்க்க எழுத்தாகவே இருக்கும்.
எடுத்துக்காட்டு: கன்று, இன்று, சென்றான், மன்றம், தென்றல்.

நவம்பர் 19

இந்திரா காந்தி அவர்களின் பிறந்தநாள்



இந்திரா காந்தி (இந்திரா பிரியதர்சினி காந்தி) இந்தியாவின் மூன்றாவது பிரதமரும், ஒரே இந்திய பெண் பிரதமரும் ஆவார். அவர், இந்தியாவின் முதல் பிரதமரான ஜவகர்லால் நேருவின் ஒரே மகளும் ஆவார். இவரது இயற்பெயர் இந்திரா பிரியதர்சினி, ஃபெரோஸ் காந்தியுடனான திருமணத்திற்கு பின் இந்திரா பிரியதர்சினி காந்தியாக மாறினார், சுருக்கமாக இந்திரா காந்தியாக மாறினார்.இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966-இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். 1977-இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் பெரும் தோல்வியடைந்த இவர் மூன்று ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். 14 ஜனவரி 1980-இல் பிரதமராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்ட இவர் 1984-இல் கொலை செய்யப்படும் வரை பதவியில் இருந்தார்.

உலகக் கழிவறை நாள்

உலகக் கழிவறை நாள் (World toilet day) ஆண்டு தோறும் நவம்பர் 19 ஆம் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளிலேயே 2001 ஆம் ஆண்டில் உலகக் கழிவறை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது.[1] அன்று முதல் இவ்வமைப்பின் உறுப்பு நாடுகள் இந்நாளை உலகளாவிய முறையில் சிறப்பாகக் கொண்டாடி வருகின்றன. அடிப்படைக் கழிவறை வசதிகள் பற்றியும், அது குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவதுமே.

நீதிக்கதை

 அற்பமாக எண்ணாதே

 

ஒரு காட்டின் ஓரத்தில் ஒரு சிறிய தோட்டம் இருந்தது. அதற்கு அப்பால் அதை மிக ஒட்டி ஒரு வறண்ட நிலப் பகுதியும் இருந்தது. இத்தோட்டத்தில் பல அழகிய மலர்கள் இருந்தன. ரோஜா, சாமந்தி, முல்லை, கனகாம்பரம்  போன்ற பல  மலர்கள் இருந்தன. வறண்ட பகுதியில் கள்ளிச் செடிகள் வளர்ந்திருந்தன. எல்லா செடிகளும் ஒற்றுமையாக இருந்தன. ஒன்றோடு ஒன்று பேசிக் கொண்டன. காட்டு செய்திகளை மலர்கள் சொல்லும். வறண்ட நிலப் பகுதியில் நடக்கும் காரியங்களை கள்ளிச்செடிகள் அவர்களோடு கூட பகிர்ந்து கொள்ளும். ஆனால் இந்த ரோஜா செடிகள் மட்டும் தலைக்கனம் பிடித்தவையாக இருந்தன. அவைகள் இந்த கள்ளிச் செடிகளை பார்த்து “எப்படி முள்ளோடு இருக்கிறது எவ்வளவு குண்டாக இருக்கிறது  ஒரு உருவம் இல்லாமல் இருக்கிறது” என்று சொல்லி கேலி செய்வது உண்டு. அதைக் கேட்டு கள்ளிச்செடிகள்  சோகமாக இருப்பது உண்டு. சில நாட்கள் கழித்து கோடை காலம் வந்தது. காட்டில் சில மாதங்களாக மழை பெய்யவில்லை. ஆகவே கோடைகாலத்தில் குளங்கள் எல்லாம் வறண்டு போய்விட்டன. மிருகங்களும் பறவைகளும் நீர் தேடி வேறு இடம் செல்வதற்கு தயாராகி விட்டன. செடிகள் பாவம் அவைகளால் எங்கும் செல்ல முடியாது எனவே அவைகள் வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் தாங்கள் இறந்து விடுமோ என்று பயந்தன. அந்த வேளையில் கள்ளிச்செடிகள் எல்லாம் நாங்கள் எங்களுடைய நீரை உங்களுக்கு வேரின் வழியாக தருகிறோம் என்று சொல்லி அவைகளை ஆறுதல் படுத்தின. அதன்படியே தாங்கள்  சேமித்து வைத்திருந்த அதிகப்படியான நீரை வேரின் வழியாக இந்த செடிகளுக்கு கொடுத்து உதவின. சிறிது நாட்களிலே மழை பெய்ய தொடங்கி எல்லா செடிகளும் பிழைத்து விட்டன. இப்பொழுது ரோஜா செடிகள் தங்கள் தலைக்கனம் குறைந்து தாங்கள் தேவை இல்லாமல் பேசியதை எண்ணி வருந்தி  கள்ளிச்செடிகளிடம் மன்னிப்பு கேட்டன.

நீதி: பிறரை அற்பமாக எண்ணுவது மிகவும் கொடிய‌ குணம். நாம் அனைவரும் கடவுளின் பிள்ளைகள் எனவே ஒருவரை உருவ கேலி செய்வது மிகவும் தவறு. மற்றவர் மனம் வருந்தும்படி ஒருநாளும் பேசக்கூடாது. நம்முடைய அழகும் திறமையும்  அல்ல நம்முடைய குணங்களே மிகவும் முக்கியமானதாகும்.

இன்றைய செய்திகள்

19.11.2025

⭐இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்


⭐தென்காசி மாவட்டத்தில் கனமழை --  குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை விதிப்பு.

⭐அமெரிக்காவிடம் இருந்து ஆண்டிற்கு 22 லட்சம் டன் LPG இறக்குமதி செய்ய இந்தியா ஒப்பந்தம்.

⭐இந்தியாவில் விளையாட்டின் தலைநகரமாக தமிழ்நாடு மாறி உள்ளது- அமைச்சர் அன்பில் மகேஷ்.

⭐அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் புதிய சர்வதேச மாணவர்களின் சேர்க்கை கடும் சரிவு.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதும் மிகவும் பிரபலமான ஆஷஸ் தொடர் வருகிற 21-ந் தேதி தொடங்க உள்ளது. 
இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Today's Headlines

⭐Tamil Nadu has become the sports capital of India - Minister Anbil Mahesh

⭐Bathing at the Courtallam Main Falls has been banned due to heavy rains in the Tenkasi district.

⭐India signs deal to import 2.2 million tonnes of LPG per year from US.

⭐Enrollment of new international students at US universities plummets.

 *SPORTS NEWS* 

🏀The much-awaited Ashes series between Australia and England is set to begin on the 21st. * Players from both teams are training hard for the series.

Covai women ICT_போதிமரம்

Monday, November 17, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.11.2025

வ.உ.சிதம்பரனார்

   






திருக்குறள்: 

குறள் 351: 
பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும் 
மருளானாம் மாணாப் பிறப்பு.

 விளக்க உரை: 

மெய்ப்பொருள் அல்லாதவைகளை மெய்ப்பொருள் என்று தவறாக உணர்கின்ற மயக்க உணர்வால் சிறப்பில்லாத துன்பப் பிறவி உண்டாகும்.

பழமொழி :

Break through a thousand obstacles and move forward. 

ஆயிரம் தடைகள் வந்தாலும் அதை உடைத்தெறிந்து முன்னேறு.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.


2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

ஒருவனுக்கு என்ன நேர்கிறது என்பது அனுபவம் அல்ல; ஏதாவது நேரிடும் போது அவன் என்ன செய்கிறான் என்பதே அனுபவம் -ஆல்டஸ் ஹக்ஸ்லி 

பொது அறிவு : 

01.தமிழ்நாட்டில் காப்பி ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?

தாண்டிக்குடி, திண்டுக்கல் 

Thandigudi, Dindigul 

02.உலகிலேயே இரண்டாவது பெரிய சதுப்புநிலக் காடு எது?

பிச்சாவரம் அலையாத்திக் காடு

Pichavaram Mangrove Forest

English words :

epitaph- words written on the

 Tombstone,craned-to stretch one's neck to see

தமிழ் இலக்கணம்: 

'ன', 'ண' போன்ற எழுத்துக்களின் சரியான பயன்பாட்டிற்கு, அவை ஒலிக்கும் இடம் மற்றும் அடுத்து வரும் எழுத்துக்களின் விதிகளைப் புரிந்துகொள்வது அவசியம்.

'ண' வரும் சொற்களில், அதையடுத்து வரும் உயிர்மெய் எழுத்து 'ட' வர்க்க எழுத்தாகவே இருக்கும் 
எடுத்துக்காட்டு: மண்டபம், நண்டு, உண்டியல், கொண்டாட்டம், கண்டு. 

அறிவியல் களஞ்சியம் :

 பறவை வளர்ச்சியின் வரலாற்றின் காரணமாகவும், முட்டைகள் கூட்டில் இருந்து உருண்டு விழாமல் இருக்க பறவைகள் கட்டும் கூட்டின் அமைப்பிற்கு ஏற்ப முட்டை வடிவம் அமைகிறது என்று காரணம் சொல்லப்பட்டு வந்தது. சமீபத்திய ஆய்வில் 1,400 மேலான  பறவை வகைகளின் 50,000 முட்டைகளின் அமைப்பை ஆராய்ந்த ஆய்வாளர்கள் குழு (Stoddard et al. 2017) பறவையின் பறக்கும் வாழ்க்கைத் தேவைக்கேற்ப முட்டையின் வடிவங்கள் அமைகின்றன

நவம்பர் 18

வ. உ. சி அவர்களின் நினைவுநாள்

வ. உ. சி என்றழைக்கப்படும் வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம் பிள்ளை (V. O. Chidambaram Pillai, செப்டம்பர் 5 1872 – நவம்பர் 18 1936) ஒரு இந்தியா விடுதலைப் போராட்ட வீரர். பிரித்தானியக் கப்பல்களுக்குப் போட்டியாக முதல் உள்நாட்டு இந்திய கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர். இவர் தொடங்கிய சுதேசி நீராவிக் கப்பல் நிறுவனம் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கடல்வழிப் போக்குவரத்தை மேற்கொண்டது. பிரித்தானிய அரசால் தேசத்துரோகியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். அவரது வழக்கறிஞர் உரிமமும் பறிக்கப்பட்டது.

நீதிக்கதை

ஒரு ஊரில் ஒரு காடு இருந்தது. அந்த காட்டில் பலவிதமான பறவைகள் இருந்தது. அதில் சிட்டு என்ற ஒரு குருவியும் இருந்தது. அந்த குருவிக்கு உயர உயர வானத்தில் பறக்க மிகவும் பிடிக்கும். அது எப்பொழுதும் வானில் பறந்து கொண்டே இருக்கும். அது மிகுந்த சந்தோஷமாக இருந்தது.  

ஒரு நாள் அந்த காட்டிலே ஒரு பெரிய புயல் வந்தது. மரங்கள் எல்லாம் ஆடியது. இந்த குருவியால் மேலே பறக்க முடியவில்லை. அப்படி பறக்க முயற்சித்த போது ஒரு மரத்தின் கிளை அதன் மேல் உடைந்து விழுந்தது. அது கீழே  மயங்கி விழுந்து விட்டது. அது விழித்த பொழுது ஓரளவு புயல் அடங்கி இருந்தது. ஆனால் பறக்க முயற்சித்த போது அந்த குருவியால் பறக்க முடியவில்லை‌. அது மிகுந்த வேதனை அடைந்தது. ஏனென்றால் அதற்கு காற்றில் பறப்பதுதான் மிகவும் பிடிக்கும்.  பறக்க  முடியாமல் போனதற்காக அழுது கொண்டே இருந்தது. 

அப்பொழுது அந்த வழியாக ஒரு வயதான முதியவர் வந்தார். அவர் அந்த குருவியை பார்த்து ஏன் அழுகிறாய்? என்று கேட்டார். நான் பறந்து கொண்டிருந்தேன் இப்பொழுது என்னுடைய இறக்கைகள் உடைந்து விட்டது. என்னால் பறக்க இயலவில்லை என்று கூறியது. அப்பொழுது அந்த முதியவர் பறக்க முடியாவிட்டால் என்ன நட என்று கூறினார். நான் எப்படி நடக்க முடியும் நான் எப்பொழுதும் பறந்து கொண்டே இருப்பவளாச்சே என்று அந்த சிட்டு கூறியது. 

அவர்  ஒரு வழி அடைத்தால் இன்னொரு வழி திறக்கப்படும் உனக்கு பறக்க முடியவில்லை ஆனால் கால்கள் உள்ளதால் நடக்க முடியும் எனவே நடந்து செல் என்று சொன்னார். அந்த குருவியும் அவர் சொன்னதற்காக நடக்க முயற்சித்தது முதலில் அதனால் நடக்க முடியவில்லை. ஆனால் சிறிது நாட்கள் கழித்து நன்கு நடக்க ஆரம்பித்தது.

இப்பொழுது குருவி தன்னைச் சுற்றி நடக்கும் அநேக காரியங்களை கவனிக்க ஆரம்பித்தது. நடக்க ஆரம்பித்ததினால் இலைகளுக்கு அடியில் இருக்கும் சிறுசிறு பூச்சிகள், உணவு கொண்டு சாரை சாரையாக  செல்லும் எறும்புகள், அங்கங்கே கிடைத்த  தானியங்கள், அழகிய மலர்கள், மலர்களை சுற்றி வட்டமிடும் தேனீக்கள், வண்ணத்துப்பூச்சிகள் என்று பல பல காரியங்களை அது பார்த்து மகிழ்ந்தது.

 நான் எப்பொழுதும் மேலே பறந்து கொண்டிருந்ததனால் இவை எல்லாவற்றையும் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. இப்பொழுது இவைகளை நான் பார்த்து ரசிக்க கடவுள் கிருபை செய்துள்ளார் என்று அது எண்ணி மகிழ்ந்தது. 

ஒரு நாள் இப்படியாக அது நடந்து நடந்து அழகிய காரியங்களை பார்த்து கடவுளுக்கு நன்றி சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அதனுடைய உடலில் ஒரு புத்துணர்ச்சியை‌ உணர்ந்தது. தன் இறக்கைகளை விரித்து பார்த்தது  அந்த சிட்டுகுருவியால் இப்போது பறக்க முடிந்தது. இப்பொழுது இந்த குருவி பறப்பது மட்டுமல்ல  நடந்தும்  உலகத்தையும் காட்டையும் ரசித்துக் கொண்டிருக்கிறது.

 நீதி:  ஒருவேளை நம்முடைய வாழ்விலே ஒரு பிரச்சனை வரும்போது அதுவும் நன்மைக்காகவே என்று எண்ணிக் கொண்டு வேறு ஒரு வழியை நாம் தேடினால் நம்மை படைத்தவர் நமக்கு நிச்சயமாக ஒரு வழியை தருவார்.

இன்றைய செய்திகள்

18.11.2025


⭐2.50 கோடி மக்களின் நலம் காத்துள்ள மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் - முதலமைச்சர் பெருமிதம்.

⭐சவுதியில் 42 இந்தியர்கள் உயிரிழப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்.

⭐பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானம் வாங்குகிறது உக்ரைன்.

⭐அசாமில் சிறப்பு திருத்தம் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவு.

🏀விளையாட்டுச் செய்திகள்

🏀2026 IPL: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சங்ககாரா மீண்டும் நியமனம்.

Today's Headlines 

⭐Chief Minister is proudly said that Medicine at People's doorstep scheme has been taken care of the health of 2.50 crore people. 

⭐Chief Minister M.K. Stalin expressed condolences over the death of 42 Indians in Saudi Arabia.

⭐Ukraine going to buy 100 Rafale fighter jets from France.

⭐Election Commission orders special revision amendment in Assam.

 *SPORTS NEWS* 

🏀2026 IPL: Sangakkara reappointed as Rajasthan Royals head coach.

Covai women ICT_போதிமரம்

Sunday, November 16, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 17.11.2025

லாலா லஜபதி ராய்

   






திருக்குறள்: 

குறள் 996: 

பண்புடையார்ப் பட்டுண் டுலகம் அதுவின்றேல் 
மண்புக்கு மாய்வது மன். 

உரை: 

பண்பு உடையவரிடத்தில் பொருந்தியிருப்பதால் உலகம் உள்ளதாய் இயங்குகின்றது, அஃது இல்லையானால் மண்ணில் புகுந்து அழிந்து போகும்.

பழமொழி :

Great oaks from little acorns grow. 

சிறிய தொடக்கம் பெரிய வளர்ச்சியாக மாறும்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.அறிவே மனிதனின் ஆயுதம் என்பதை நான் அறிவேன்.


2.எனவே மற்றவர்கள் என்ன சொன்னாலும் எனது பகுத்தறிவு கொண்டு முடிவெடுப்பேன்.

பொன்மொழி :

கேள்விப்பட்டதை எல்லாம் நம்பி விடாதீர்கள் . அதில் இருக்கும் உண்மையை அறிய முற்படுங்கள் - கௌதம புத்தர்

பொது அறிவு : 

01.உலகின் மிக உயரமான கிரிக்கெட் மைதானம் எது?

சைல் கிரிக்கெட் மைதானம் 

இமாச்சலப் பிரதேசம்

 Chail Cricket Ground 

 Himachal Pradesh. 

02. மனித கணினி என்று அழைக்கப்படுபவர் யார்? 

இந்திய கணித மேதை 

சகுந்தலா தேவி

Shakuntala Devi, An Indian mathematician 

English words :

delicious –having a very pleasant taste or smell.

இன்சுவைமிக்க அல்லது நறுமணம் மிக்க.

தமிழ் இலக்கணம்: 

 மொத்தம் 18 மெய்யெழுத்துக்கள் அவற்றில் 
ய்,ர்,ழ் என்ற மூன்று மெய்யெழுத்துக்கள் அருகில் மட்டும் மற்றொரு மெய் எழுத்து வரும். மற்ற 15 எழுத்துக்கள் அருகில் மற்றொரு மெய்யெழுத்து வராது 
எ.டு – ய் –தேங்காய்ப்பால் 
ர் – நேர்க்கோடு
ழ் – தாழ்ப்பாள்

அறிவியல் களஞ்சியம் :

 தன்னைவிட உருவில் பெரிய தவளைகளையும், பல்லி இனங்களையும் உணவாகக் கொள்ளும் திறனுடையது  'ரீகல் ஜம்ப்பிங் ஸ்பைடர்'  (regal jumping spider- Araneae: salticidae) என்னும் சிலந்தி. இவற்றின்  கண்கள் நான்கு ஒரே வரிசையிலும், மற்றவை வரிசைக்கு இரண்டாக மேலும் இரு வரிசையிலும் என, கண்கள் மூன்று வரிசையில் அமையும் தனிப்பட்ட அமைப்பைக் கொண்ட சிறப்புடையது. இந்த அமைப்பு அதன் பார்வையைக் கூர்மையாக்குகிறது. தனது உணவான உயிரியின் மீது பாய்ந்து, அவற்றின் உடலில் நஞ்சைச் செலுத்தி கொன்றபிறகு அவற்றின் உடலைத் துண்டுகளாகி உண்டுவிடும். ஜர்னல் ஆஃப் அராக்நாலாஜி (Journal of Arachnology) இதழில் முதன்முறையாக முதுகெலும்புள்ள விலங்குகளை உண்ணும் சிலந்தி ஒன்றுள்ளது என்று  ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. 

நவம்பர் 17

லாலா லஜபதி ராய்  அவர்களின் நினைவுநாள்


லாலா லஜபதி ராய் ஒரு எழுத்தாளரும் அரசியல் தலைவரும் ஆவார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் இவரது பங்குக்காக இவர் பெரிதும் மதிக்கப்படுகிறார். இவரை மக்கள் பஞ்சாப் சிங்கம் எனவும் அழைப்பதுண்டு. லால்-பால்-பால் என்று அழைக்கப்படும் மூன்று முக்கியத் தலைவர்களுள் இவரும் ஒருவராவார். மற்ற இருவர் பால கங்காதர திலகர் மற்றும் பிபின் சந்திர பால் ஆவர். 'லாலா லஜபத் ராய்' பஞ்சாப் தேசிய வங்கி மற்றும் "லட்சுமி காப்புறுதி கம்பெனி" ஆகியவற்றை நிறுவியவரும் ஆவார்

நீதிக்கதை

 ரூபாய் நோட்டு


ஒரு கிராமத்தில் ஒரு பள்ளி இருந்தது. அந்த பள்ளியில் குமார் எனும் சிறுவன் படித்து வந்தான். ஒருநாள் குமார் சோகமாக இருப்பதை கண்ட ஆசிரியர் அவனிடம் காரணம் கேட்டார். அதற்கு பதிலளித்த குமார் தான் ஒரு தவறு செய்துவிட்டதாகவும், அந்த தவறை காரணமாக காட்டி அவனுடைய நண்பர்கள் அவனை வெறுத்து ஒதுக்குவதாகவும் கூறினான்.

செய்த தவறை உணர்ந்த குமார் தன் நண்பர்களை எண்ணி ஏங்குவதை அறிந்துகொண்ட ஆசிரியர் குமாருக்கு உதவி செய்ய நினைத்தார். அடுத்த நாள் வகுப்பிற்கு சென்ற ஆசிரியர், ஒரு 50 ரூபாய் நோட்டை கையில் வைத்து இது யாருக்கு வேண்டும் என்று மாணவர்களிடம் கேட்டார். துள்ளி எழுந்த மாணவர்கள் அனைவரும் கைகளை உயர்த்தினர்.

மாணவர்களின் செய்கையை பார்த்த ஆசிரியர், அந்த நோட்டை கைகளால் கசக்கி இப்போது அந்த ரூபாய் நோட்டு யாருக்கு வேண்டும் என கேட்டார். அப்போதும் மாணவர்கள் கைகளை தூக்கியவாறே நின்றுகொண்டிருந்தனர்.

இம்முறை ரூபாய் நோட்டினை கீழே போட்டு விட்டு ஆசிரியர் மாணவர்களிடம் அதே கேள்வியை கேட்டார். மாணவர்களிடம் எந்த ஒரு மாற்றமும் இல்லை. வகுப்பிலிருந்த அனைவருக்கும் அந்த 50 ரூபாய் வேண்டும் என்பது போல் கையை இறக்காமல் நின்றனர்.

கையில் ரூபாய் நோட்டை எடுத்த ஆசிரியர், இந்த 50 ரூபாய் நோட்டு அழுக்காக இருந்தாலும், சரி கசங்கி இருந்தாலும் சரி அதன் மதிப்பு குறைவதில்லை. அதே போல் சில நேரங்களில் நாம் தெரியாமல் செய்யும் தவறுகள் நம் மதிப்பை குறைத்துவிடாது. ஒரு மனிதன் தவறு செய்வது இயல்பு, அவன் தான் செய்த தவறை உணர்ந்துவிட்டாலே அவன் மன்னிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில் இந்த வகுப்பில் படிக்கும் குமார் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக ஒரு தவறை செய்துவிட்டான். அந்த தவறு ரூபாய் நோட்டின்மேல் பட்டிருக்கும் அழுக்கை போன்றது. அதனால் குமாரின் மதிப்பு எப்போதும் குறையாது. எனவே, தெரியாமல் செய்த தவறுக்காக குமாரை ஒதுக்காமல் அவனுடன் சேர்ந்து பழகுங்கள் என ஆசிரியர் கூறினார். ஆசிரியர் கூறிய கதையில் இருந்த உண்மையை உணர்ந்த சக மாணவர்கள் குமாரிடம் மன்னிப்பு கேட்டு அவனை தங்களுடன் சேர்த்து கொண்டனர்.

இன்றைய செய்திகள்

17.11.2025

⭐6 முதல் 12ஆம் வகுப்புகளுக்கான அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு.

⭐ஐ.நா.வின் குழந்தைகள் நல அமைப்பான UNICEF தூதராக நடிகை கீர்த்தி சுரேஷ் நியமனம்!

⭐சம்பா நெற்பயிர் காப்பீட்டிற்கான காலவரம்பு நவ. 30-ந்தேதி வரை நீட்டிப்பு.கடந்த வருடம் 10 லட்சம் ஏக்கர் சம்பா நெற்பயிர் காப்பீடு செய்யப்பட்டது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி  கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்றது. நியூசிலாந்து முதலில் விளையாடி 269 ரன்கள் விளாசியது.

Today's Headlines

⭐ Tamilnadu school 's Half-yearly exam time schedule for classes 6 to 12 has been released. 

⭐Actress Keerthy Suresh is appointed as UNICEF ambassador.

⭐The deadline for Samba rice crop insurance has been extended to Nov 30. Last year, 10 lakh acres of Samba rice crop was insured.

 *SPORTS NEWS* 

🏀The first ODI between New Zealand and West Indies was played in Christchurch. New Zealand batted first and scored 269 runs.

Covai women ICT_போதிமரம்

Thursday, November 13, 2025

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 14.11.2025

     




அனைத்து குழந்தைகளுக்கும் இனிய குழந்தைகள் தின வாழ்த்துகள்


திருக்குறள்: 

குறள் 942: 

மருந்தென வேண்டாவாம் யாக்கைக் கருந்திய 
தற்றது போற்றி உணின். 

உரை: 

முன் உண்ட உணவு செரித்த தன்மை ஆராய்ந்து போற்றியப் பிறகு தக்க அளவு உண்டால், உடம்பிற்கு மருந்து என ஒன்று வேண்டியதில்லை.

பழமொழி :

As you sow, so shall you reap. 

விதைத்ததைப்போல் பயன் பெறுவாய்.

இரண்டொழுக்க பண்புகள் :

1.கோபம் என் அறிவை மறைக்கும்.

2.எனவே எப்போதும் கோபப்படமாட்டேன்.

பொன்மொழி :

யார் என்ன நினைப்பார்கள் என்று நினைக்கும் ஒவ்வொரு நொடியும் நீ உன் அழகான வாழ்க்கையை இழந்து கொண்டு இருக்கிறாய் - கௌதம புத்தர்

பொது அறிவு : 

01. உலக குழந்தைகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?

நவம்பர் 20 - November 20

02.ஜவஹர்லால் நேருவின் சுயசரிதை புத்தகத்தின் பெயர் என்ன?

ஒரு சுயசரிதை (அ) சுதந்திரத்தை நோக்கி
(An Autobiography or Forward to Freedom)

English words :

stalked-pursued quietly and secretly

bowled -crying loudly

தமிழ் இலக்கணம்: 

 இரட்டைக்கிளவி, அடுக்குத்தொடர்களில் வல்லினம் மிகாது.

சல + சல = சலசல
பாம்பு + பாம்பு = பாம்புபாம்பு.

அறிவியல் களஞ்சியம் :

 உடலின் நோய் எதிர்ப்பு செயல்பாட்டில் ஈடுபடும் செல்களின் மரபணுக்களில் ஏற்படும் ஒரு திடீர் மாற்றம் (mutation) காரணமாக  நுண்ணுயிரால் தாக்கப்பட்டதை அறியும் திறனை உடல் இழக்கிறது.  இதனால்  நோயெதிர்ப்பு அமைப்பு செயல்படாமல் உடல் நோய்வாய்ப்படுகிறது.  சின்னம்மை (chicken pox) நோயால் தாக்கப்பட்டவர்கள் இந்த  மரபணுமாற்ற பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் பொழுது, நோய் எதிர்ப்பின்றி உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது; ஒருசிலர் மட்டும் ஏன் மற்றவர்களை விட தொற்றுநோய்களால் மிக எளிதில் பாதிக்கப்படுகிறார்கள்.

நவம்பர் 14

ஜவகர்லால் நேரு (நவம்பர் 141889 – மே 271964), இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பண்டிட் நேரு மற்றும் பண்டிதர் நேரு என்றும் அழைக்கப் பெற்றார். இவர் குழந்தைகள் மேல் மிகவும் அன்பு கொண்டவர். இவர் பிறந்தநாள் அன்று இந்தியாவில் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக, 15 ஆகஸ்ட் பதவி ஏற்று அவர் தொடக்க உரையாக "விதியுடன் ஒரு போராட்டம்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்தியாவின் திட்டக் குழுவை உருவாக்கி முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை 1951 இல் வரைந்தார். இந்தியாவின் குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில்தான் இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம் இருக்கிறது என்று நம்பி அதன் அவசியத்தை உணர்ந்து நேரு அதில் மிகவும் அக்கறை காட்டினார்.

நீதிக்கதை

 அற்புதமான சிற்பி

ஓர் அற்புதமான சிற்பி, ஒருநாள் தெருவில் போய் கொண்டிருந்தவர் ஒரு கடையருகே கனத்த பாறாங்கல் ஒன்றைப் பார்த்தார். ஏதோ பெரிய புதையலைப் பார்த்த மகிழ்ச்சி, அதன் பின் அந்தக் கடைக்காரரிடம், ஐயா, இந்தப் பாறாங்கல் தங்களுக்குத் தேவையா? அல்லது இதை நான் எடுத்துச் செல்லலாமா? என்று கேட்டார். தாராளமாய் எடுத்துச் செல்லுங்கள். இது இந்த இடத்தில் பெரிய இடையூறாய்க் கிடக்கிறது. போவோர் வருவோரெல்லாம் இடறி விழுகின்றனர்! என்றார் கடைக்காரர்.

பாறாங்கல்லை உருட்டிச் சென்ற அந்த சிற்பி, அதை நுட்பமாகச் செதுக்கி அற்புதமான கடவுள் சிலை ஒன்றை உருவாக்கினார். அந்தச் சிலை கடைத்தெருவில் விலைக்கு வந்தது. போட்டி போட்டுக் கொண்டு மக்கள் அதை விலைக்குக் கேட்டனர். அப்படிக் கேட்டவர்களுள் கல்லைக் கொடுத்த கடைக்காரரும் ஒருவர். முடிவில் அந்தக் கடைக்காரரே அதிக விலை கொடுத்து அந்தச் சிலையைப் பெற்றுக் கொண்டார்.

அந்த சிற்பியை மறந்துவிட்ட அந்தக் கடைக்காரர், இந்த அற்புதமான சிலைக்குரிய கல்லை எந்த மலையிலிருந்து எடுத்து வந்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு சிற்பி, வேறு எங்கிருந்தும் இல்லை. தங்கள் கடை வாசலில் தான் இதைக் கண்டெடுத்தேன். என்னை நினைவில்லையா தங்களுக்கு? ஆறு மாதங்களுக்கு முன் இடையூறாய்க் கிடக்கிறது என்று சொல்லி என்னிடம் நீங்கள் கொடுத்த கல் தான் இது என்றார். கடைக்காரர் வியந்தார். ஆம். தங்கள் பார்வையில் இது தடைக் கல்லாய்த் தெரிந்தது. என் பார்வையில் கடவுளை பொதிந்து வைத்திருக்கும் சிற்பக் கல்லாய்த் தெரிந்தது. வேண்டாத பகுதியையெல்லாம் செதுக்கி எடுத்தேன். உள்ளே இருந்த கடவுளின் உருவம் வெளிப்பட்டது! என்றார். 

தேவையற்ற சிந்தனைகளை நீக்கினால், பிறர் போற்றும்படியான வாழ்வை பெற முடியும்.

இன்றைய செய்திகள்

14.11.2025


⭐மகளிர் உரிமைத்தொகைக்கும் தகுதியானவர்கள் இடம்பெற உதவ வேண்டும்- நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

⭐ரூ.40 கோடி செலவில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு புற்றுநோய் தடுப்பு, பராமரிப்பு திட்டத்தில் நடமாடும் மருத்துவ ஊர்திகள்.

⭐அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த தாழ்வுநிலை: 16-ந்தேதி முதல் கடலோர பகுதிகளில் தொடர்ந்து மழைக்கு வாய்ப்பு.

🏀 விளையாட்டுச் செய்திகள் 

🏀13-வது மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை  முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 52 ஆண்டு கால உலகக் கோப்பை வரலாற்றில் இந்திய அணி கோப்பையை வென்றது இதுவே முதல்முறையாகும்.அந்த வகையில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு சென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

Today's Headlines

⭐ Chief Minister M.K. Stalin has instructions for administrators. Women's rights should also be ensured for deserving candidates.

⭐ Chief Minister M.K. Stalin inspects mobile ambulances under the Cancer Prevention and Care Program and the Mobile ambulance facility, a project costing Rs. 40 crores.

⭐ Successive low-pressure formation, chance of continuous rain from  16th November in coastal regions.

 SPORTS NEWS 

🏀The 13th Women's ODI World Cup was won by the champions for the first time. This is the first time in the 52-year history of the World Cup that the Indian team has won the trophy. In that regard, a felicitation ceremony was held for Captain Harmanpreet Kaur at a private school in Chennai.

Covai women ICT_போதிமரம்